பானு என்னைவிடச் சிறியவள். என்னோடு சேர்ந்து படித்தாள், ஆடினாள், பாடினாள். நான் நானாகவே இருக்கிறேன். பானு வீட்டுத் தலைவி ஆனாள், மனைவி ஆனாள், தாய் ஆனாள். கடைசியில் மடிந்துகூடப் போய் விட்டாள். என் வாழ்க்கையில் எந்த மாறுதலும் இல்லை. பானு சுகங் கண்டாள்; துன்பப்பட்டாள்; சந்தோஷப் பட்டாள்; கவலைப்பட்டாள்; அனுபவித்தாள், விரக்தி அடைந்தாள்; எல்லாம் விரும்பினாள்; எல்லாவற்றையும் இழந்து விட்டாள்.
நான் உயிரோடு இருக்கிறேன். பானு இறந்து விட்டாள் ... அப்படி எவ்வளவு நேரம் உட்கார்ந்திருந்தேனோ எனக்குத் தெரியாது. பெரியக்கா தேடிக்கொண்டு வந்தாள். "பானு மகன் சாதம் சாப்பிடமாட்டேன்னு அழுதுட்டிருக்கான். பார் கேசவ்!" என்றாள். உடனே எழுந்து போனேன். பாபு கதவருகில் நின்றுகொண்டு "அம்மா!...அம்மா!..." என்று சத்தம்போட்டு அழுது கொண்டிருந்தான். எனக்குத் துக்கம் தொண்டையை அடைத்தது. "நானீ!...வாப்பா!" என்று அவனைத் தூக்கித் தோள்மேல் போட்டுக் கொண்டேன்.
"மாமா! அம்மா..."
"வருவாப்பா ஊரு... போயிருக்கா. இப்பவே ரயில் வண்டியிலே வருவா. நீ ... சாதம் சாப்பிட்றியா? நான் ஊட்றேன்."
"ஊஹூம்! அம்மா...எங்கம்மா..."
"அம்மா வர்றதுக் குள்ளே நல்ல பையனா நீ சாதம் சாப்டிட்டு இருந்தா அம்மா நிறெய பொம்மெ கண்டு வருவா உனுக்கு. ஊதல்கூட கொண்டுவருவா. நம்ம ரெண்டு பேரும் விளெயாடலாம்."
"எங்கம்மா எங்கே போனா?"
"ஊருக்குப் போனா பாபூ! அப்பொ நீ தூங்கிட்டிருந்தே."
"ஊம்..ஊம்...என்னெக் கூத்தித்துப் போலுயே ஏன்?" என்று கேட்டு மீண்டும் அழத் தொடங்கினான். என் மனம் ரம்பங்களின் இடையில் நசுங்கிக்கொண்டிருந்தது. அவனை மார்போடு அணைத்துக் கொண்டேன்.
"அம்மா இப்பவே வந்துடுவா. அதுவரெக்கும் என்னெப் பாத்துக்கச் சொன்னா. நிஜமா நானீ! இன்னா, சாதம் சாப்பிட்றியா? நானும் சாப்பிட்றேன்."
"நீயும் சாப்பித்தியா?"
"நானும், நீயும் நல்லா ஒரே தட்லே போட்டுச் சாப்பிடலாம்."
"அப்பொ எங்க அம்மா எங்கே சாப்புதுவா?"
"அம்மா...சொந்தக்கார் ஊருக்குப் போயிருக்காங்கில்லே! அங்கே அம்மாக்கு அவங்க எல்லாம்
கொடுப்பாங்க. சாப்பிடுவா."
"தயிறு போதுவாங்களா?"
"ஆமாம்.. தயிரு போடுவாங்க. நெய்யி போடுவாங்க., நீ கூடத் தயிர் போட்டுச் சாப்டக்கூடாதா?"
தொடரும்