சமாதானப்படுத்துவது என்பது வீட்டில் யாருக்கும் புரியவில்லை. சித்தி அவனைத் தூக்கிகப் போனாள். கேவி அழுது கொண்டே என்னைச் சேர்த்துக் கட்டிக் கொண்டான். "வேணாம் நானீ! யார் கிட்டேயும் போகவேணாம் நானே தூக்கிக்கிறேன்!"
அவன் பிறந்ததிலிருந்து ஒரு மணி நேரம் கூடத் தாயைப் பிரிந்து இருந்ததில்லை. வீட்டில் தந்தை இருந் தாலும் தாயிடம்தான் அவனுக்கு அளவு கடந்த பற்று. இப்போது அவனுக்கு அறிவு தெரியும் சமயம். அம்மாவை எப்படி மறந்து விடுவான்? என் இதயம் படபடத்தது. அவன் ஏங்கத் தொடங்கிவிட்டால் என்ன செய்வது? குழந்தைப்பருவம். போகப்போக அவனே மறந்து விடுவான் என்று நினைத்தாலும் அவன் தூக்கத்திலிருந்து எழுந்து மறுபடியும் அழுதால் என்ன செய்வது? மெதுவாக அவனைப் படுக்கையில் படுக்க வைத்தேன்.
மேலும் இரண்டு நாட்கள் கடந்தன. பாபு ஒரேயடியாக ஏங்கத் தொடங்கினான். சாதம் சாப்பிடுவதை அடியோடு நிறுத்திவிட்டான். "அம்மா! அம்மா!" என்று பேசுவதற்கு இடைவெளி இல்லாமல் அழுகிறான். அம்மாவை அழைத்துவரச் சொல்கிறான். இல்லையென்றால் தன்னை அழைத்துப் போகச் சொல்கிறான்.
சித்தியின் அழுகையால் இன்னும் பயந்து விட்டான். தூக்கத்தில் திடுக்கிடுவது, துள்ளி எழுந்து அழுவது, எல்லார் முகத்திலேயும் எதையோ தேடுவது, ஏமாற்றத்தால் ஓவென்று அழுவது. எனக்கென்னவோ பயமாக இருக்கிறது. சித்தி, அக்காமார்கள் மெதுவாக அவனைச் சமாதானப் படுத்த முயற்சிக்கின்றனர். ஆனால் அவன் யாரையும் அருகில் வரவிடுவதில்லை. அந்த இரவு அவனுக்குக் காய்ச்சல் வந்தது. உடனே சென்று டாக்டரை எழுப்பி அழைத்து வந்தேன். டாக்டர் ஏதோ ஊசி போட்டுச் சென்றார்.
காலை விடியும்பொழுது காய்ச்சல் சற்றுக் குறைந்தது. அவன் இன்னும் தூங்கிக்கொண்டிருக்கிறான். நான் முகம் கழுவிக்கொண்டு வந்து அருகில் உட்கார்ந்தேன்.
மெதுவாகக் கூப்பிட்டேன். "நானீ..."
மெதுவாகக் கண்திறந்தான்.
"அம்மா! திருட்டுப்பயலே, முழிச்சிட்டுதான் இருக்கிறாயா?"
"அம்மா...எங்கே?"
அய்யோ! எவ்வளவு தவறு செய்துவிட்டேன்? அந்தச் சொல்லையே அவனுக்கு நினைவுபடுத்தக் கூடாது.
"மாமா!"
"ஆமாமாம், நானீ! நீ காபி குடிக்கிறியா? கொஞ்சமா?"
"ஊஹூம்! எங்கம்மா காபி குதுக்க மாத்தா"