(Reading time: 22 - 43 minutes)
காகித மாளிகை
காகித மாளிகை

"சித்தி! பானு வரல்லியா?"

"........"

"சித்தி! நீ கூட பானுவெப் பாத்தெ இல்லே?"

சித்தி நிதானமாகச் சொன்னாள் - "கனவு கண்டியா பாபு? பானு திரும்பி வருவாளா? அவ்வளவுக்குக் குடுத்து வெச்சிருக்கோமா?"

"கனவில்லே சித்தி! பானு எனக்கு நல்லா தென்பட்டா. ஒரு செம்படவன் காப்பாத்தினான்னு சொன்னா."

"உனக்குக் கனவுதான் வந்தது. அய்யோ தாயே!" என்று சொல்லி சித்தி சத்தம்போட்டு அழத்தொடங்கினாள்.

பாபு திடுக்கிட்டு எழுந்துவிட்டான். பயத்தில் என்னைக் கட்டிப் பிடித்துக் கொண்டான். முதுகைத் தடவிக் கொண்டே அவனை என்மேல் படுக்க வைத்துக் கொண்டேன். குச்சிபோல் உலர்ந்து மெலிந்துபோய் விட்டான். கண்கள் குழிவிழுந்து உள்ளே போயிருந்தன. தலை சிறிய புதர்போல் வளர்ந்து இருந்தது. வயிறு முதுகெலும்போடு ஒட்டிக் கிடந்தது. எனக்குத் துக்கம் பீறிட்டுக்கொண்டு வந்தது. இப்போது பானு இருந்தால்......உண்மையில் வந்தால், பாபு இப்படி ஆகிவிடுவான் என்று நினைத்தால் ........பானு எப்போதும் அத்தகைய வேலை செய்ய மாட்டாள்.

தெருவில் இருட்டுக்குள் வெறுமையாகப் பார்த்துக் கொண்டே உட்கார்ந்திருந்தேன். இந்த முறை உண்மையாகவே யாரோ படிகள் ஏறி வருகிறார்கள். நான் சட்டென்று எழுந்து விளக்கைப் போட்டேன். அதிர்ச்சியடைந்தேன். மாமா! பாபுவின் அப்பா! நான் ஆச்சரியத்துடன் அப்படியே நின்றுகொண் டிருக்கிறேன். அவர் என் அருகில் வந்து என் கைகளிலிருந்து பாபுவை வாங்கிக் கொண்டார். அவன் முகத்தையே உற்றுப் பார்க்கத் தொடங்கினார். அவர் கண்களிலிருந்து கண்ணீர் தாரை தாரையாக வழிந்துகொண்டிருந்தது. பாபுவை மார்போடு சேர்த்து அணைத்துக் கொண்டார்.

நான் மந்திரம் போட்டாற்போல் நின்றுவிட்டேன். மாமா மாறிவிட்டாரா? உண்மையில் மாறிவிட்டாரா? சித்திகூட என்னைப் போலவே கல்லாக உட்கார்ந்து விட்டாள்.

யாரோடும் யாரும் பேசவில்லை. அவர் அழுக்கேறிய தாடியுடன், கிழிந்த துணிகளுடன் பிச்சைக்காரன்போல இருந்தார். கண்களில் ஆழ்ந்த துயரின் குறிகள் தென்பட்டன. ஏதோ ஆழ்ந்த உண்மையைத் தெரிந்து கொள்ள முயற்சிப்பவர்போல மகனின் முகத்தையே கண்ணெடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். அந்தப் பார்வையில் உண்மையான, தூய்மையான கழிவிரக்கம்! ..........உண்மையாகவா?" பானு பார்த்தால் நம்புவாளா?

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.