பாபு எதிர்பாராமல் கண் திறந்தான். ஒன்றும் புரியாதவன்போல் சற்றுநேரம் பார்த்துவிட்டு, கேவி அழத் தொடங்கினான். ஒரே துள்ளலில் அப்பாவின் கைகளிலிருந்து தரை மேல் விழுந்து விட்டான். ஓடிப்போய் அவனை நெருங்குவதற்குள் அப்பா மறுபடியும் மகனைத் தூக்கப் போனார்.
"பாபு பயப்பட்றான். நான் தூக்கிக்கிறேன்" என்றேன் மெதுவாக. தலைகுனிந்து கொண்டு தரைமேல் உட்கார்ந்தார். பாபுவுக்கு நினைவு இல்லை. உடலைத் தடவிக் கொடுத்தபடி மடியில் படுக்கவைத்துக் கொண்டேன்.
"அ........ம்மா......அம்மா....." உதடுகள் சில்லிட்டுப் போகின்றன. எனக்கு ஒன்றும் தோன்றவில்லை. கையைக் கூட அசைக்க முடியாமல் இருக்கிறேன். ஏதோ ஒரு முரட்டுப் பிடிவாதத்துடன் பாபுவின் முகத்தை நோக்கிக் குனிந்து அவன் கண்களையே பார்க்கலானேன். அந்தக் குழந்தைக் கண்களில் ஒளி மிக மங்கலாகத் தெரிந்தது. கண் இமைகளைத் தூக்கிப் பார்க்க முடியாமல் போகிறான். டாக்டர் வந்தார். பாபுவின் கண்கள் மூடப்பட்டு விட்டன. உதயன் மறைந்து விட்டான்! அப்பா மகனின் செத்த உடலை மார்போடு அணைத்துக்கொண்டு புலம்பி அழுகிறார். ஆடிப்பாடும் குழந்தையை, பம்பரம் போலத் திரிந்து வந்த மகனை ஒருமுறை கூடத் தூக்கிக்கொண்டு, குறைந்தது கண்ணெடுத்தும் பார்க்காத துர்ப்பாக்கியசாலி!....'கடவுளே! என்னெ அழெச்சிக்கோ! தங்கச்சி! என்னெ மன்னிச்சுடு!' என் தலை பாரமாக.......என் கண்கள் இருளடைகின்றன. எவ்வளவோ நேரம் கழித்து எழுந்து.......துக்கத்துடன்...... பைத்தியக்காரன் போல பானு மகனுக்கு எழுதிய கடிதத்தை எடுத்துப் படிக்கத் தொடங்கினேன்.
'கண்ணே!
உதயா! என் சிரஞ்சீவி! உன்னை என்ன என்று கூப்பிடுவேன்? மூன்று வயதான உன்னை, சரியாகப் பேசவராத உன்னை, இருபத்தைந்து வயதான ஆண் மகனாக, எல்லாம் தெரிந்துகொண்ட பெரிய மனிதனாகக் கற்பனை செய்து, கடிதம் எழுதவேண்டும் என்றால் எனக்கு ஒன்றும் தோன்றவில்லை பாபு! உனக்கு நான் இந்த இறுதிக் கட்டத்திலே ஏதாவது சொல்லவேண்டும். ஏதோ அறிவுறுத்தவேண்டும், எத்தனையோ உனக்குப் புரிய வைக்கவேண்டும் என்றும் என் மனதை உன் முன்னால் திறந்து வைக்கவேண்டும் என்றும் தவித்துக் கொண்டிருக்கிறேன். இப்பொழுது நான் உன் பக்கத்திலேதான் உட்கார்ந்திருக்கிறேன். நீ ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருக்கிறாய். நடு நடுவே சிரித்துக்கொண் டிருக்கிறாய். உனக்கு முத்தம் கொடுக்கவேண்டு மென்று என் மனம் துடிக்கிறது. ஆனால் அதை இப்பொழுது நான் செய்யக் கூடாது. உன்னுடைய மனம் மென்மையானது. ஒவ்வொரு சிறிய சத்தத்திற்கும்