முன்னேற வேண்டும். இலட்சியங்கள் நிறைந்த மனிதனாக விளங்கவேண்டும். உன் ஆண் உலகத்தில் இந்த இருட்டுச் சமூகத்தில் மாணிக்கமாகத் திகழவேண்டும். அநீதிகளைப் பார்த்துச் சகித்துக் கொள்ள முடியாத, அக்கிரமங்களைப் பார்த்து ஆவேசப்படும், துர்ப்பாக்கியசாலிகளைக் கண்டு கண்ணீர் விடும், கீழ்த்தன்மையைப் பார்த்தால் தலை குனிந்து கொள்ளும் தூய்மையான மனிதனாக வாழவேண்டும். அந்த நாள் வரவேண்டும், அதை நீ தேடித் தரவேண்டும். கேட்டாயா பாபூ! இது உனக்கு மிகச் சிறிய விருப்பமாகத் தெரிகிறதல்லவா? மாமாவின் பாதுகாப்பில் நீ இப்போது அப்படித்தான் வளர்ந்திருப்பாய், இல்லையா?
நீ எல்லாவற்றையும் விட முக்கியமாகத் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் ஒன்று உள்ளது. இந்தப் பரந்த உலகத்தைப் படைத்தது கடவுளாகட்டும், வேறேதாவது சக்தியாகட்டும். எதுவானாலும்----இந்த உலகத்தில் எல்லா உயிர்களும் சமமானவை. யானை எவ்வளவு பெரியதோ, எறும்பு அவ்வளவு சிறியது. ஆனாலும் அதனுடைய சிறப்பு அதனிடம் இருக்கிறது. அதனுடைய மதிப்பு அதற்கு உள்ளது. எறும்பு தாழ்ந்தது அல்ல. யானை உயர்ந்தது அல்ல. அதை நீ ஒத்துக் கொள்ள வேண்டும்.
எல்லாவற்றையும் விட மனிதன் மிக உயர்ந்த நிலையில் உள்ளவன். சிந்திக்கக் கூடியவன். புரிந்து கொள்ளக் கூடியவன். எதையும் பழக்கப்படுத்திக் கொள்ளக் கூடியவன். இந்தத் தனித்தன்மை விலங்குகள், பறவைகளிலாகட்டும், புழுபூச்சிகளிலாகட்டும், வேறு எந்தப் பிராணி யிடமும் இல்லை. அதனால் தான் மனிதன் மனிதனாகவே இருக்க வேண்டும். எந்தப் பிராணிக்கும் கிடைக்காத அந்தத் தனித் தன்மையைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். பசுக்களைப் பார்த்தாயா? தீனிக்காகக் கன்றோடு தாய் முட்டிக்கொள்கிறது. தாயோடு குட்டி இன்பம் காண்கிறது. அது அவற்றின் குற்றமல்ல; அவற்றிற்கு அந்தப் பகுத்தறிவைக் கடவுள் அருளவில்லை. ஆனால் எல்லாவற்றையும் தெரிந்து கொள்ளக் கூடிய மனிதன் அதிகாரத்தைப் பெரிதும் விரும்பினால், அக்கிரமங்களுக்கு அடிமையானால், கீழ்த் தன்மைக்குத் தலை குனிந்தால் அது மிருகத்தனம் அல்ல என்கிறாயா? நீ மனிதனாகப் பிறந்தாய். மனிதனாகவே வாழவேண்டும். மனிதனாகவே இறக்கவேண்டும்.
நீ ஓர் இலட்சியம் நிறைந்து அழுத்தமான மனிதத் தன்மையை உண்டாக்கிக் கொண்ட நாள் அடுத்தவர்களின் மனிதத் தன்மையைக் காப்பாற்ற முடியும். அடுத்த மனிதனை உணர்ந்து கொள்ள முடியும்.
என்னைப் பற்றி உனக்கு மாமாவின் மூலம் நிறையத் தெரிந்திருக்கும். நான் தற்போதைய சமூக வாழ்க்கைக்குப் பயன்படாதவள். அக்கிரமமான இந்த ஆணின் அதிகாரத்துக்குத் தலை