வணங்க இயலாதவள். இந்தக் கதியற்ற பெண் வாழ்க்கையை ஏற்றுக்கொள்ள முடியாதவள். அதனால் தான் விடுதலை பெறுகிறேன்.
மீண்டும் சில தலைமுறைகளுக்குப் பின்னர், பெண்ணுக்கு ஆண் மதிப்பு கொடுக்கக் கூடிய நிலைமையில், மனைவியிடம் கணவன் அன்பு காட்டக் கூடிய காலத்தில், இந்த உடல்களில் அதிகார வேட்கை மறைகின்ற நேரத்தில், ஒவ்வொரு பழமையின் இரத்தத் துளியும் உலர்ந்து காற்றிலே கலந்து போகும் காலத்தில், நீ நான் என்ற உயர்வு தாழ்வுகள் மறைந்து போகும் சமயத்தில், வீடுகளெல்லாம் அமைதி நிலையங்களாக விளங்கும் காலத்தில், ஒவ்வொரு பெண்ணின் இதயமும் மகிழ்ச்சி இல்லமாகும் நேரத்தில், மனிதன் மனிதனாகவே வாழும் காலத்தில்----அப்பொழுது----எனக்குப் பெண்ணாகப் பிறக்கவேண்டும் என்று இருக்கிறது. அவ்வளவு மாறுதல் வருவதற்கு உன்னைப் போன்ற பச்சைக் குழந்தைகள் இலட்சக் கணக்கானபேர் சிரமப்படவேண்டும். தேவைப் பட்டால் புன்முறுவலுடன் பலியாகவேண்டும்.
கண்ணே! வாழ்க்கை அனுபவிப்பதற்கே தவிர, இப்படிக் கைகளாலேயே அழித்துக் கொள்வதற்காக அல்ல. ஆனால் வாழ்க்கையை அனுபவிக்கவேண்டு மென்றால் உயிரோடு இருப்பது ஒன்றே முக்கிய மல்ல. இந்த உடலை இயக்கி வைக்கும் இதயம் பாழாகக் கூடாது. ஓர் ஆணி கெட்டு விட்டால் இயந்திரம் வேலை செய்கிறதா?
அம்மாவை நீ புரிந்துகொள்வதற்கு ஒரு விஷயம் சொல்கிறேன். நான் சிறியவளாக இருக்கும்போது எனக்குப் பின்னல் பின்னுவதற்காக எங்க அம்மா தங்கக் குச்சைக் கொண்டுவந்து சன்னலில் வைத்தாள். அதற் குள்ளே தங்கை அழுததால் பால் கலப்பதற்குப் போய் விட்டாள். நான் அவிழ்ந்த தலைமுடியோடு விளையாடு வதற்கு ஓடிவிட்டேன். பிறகு நினைவு வந்து பார்த்தால் சன்னலில் குச்சு இல்லை, அம்மா கவலையோடு உட்கார்ந்து விட்டாள். அப்பாவுக்குத் தெரிய வந்தபோது சிரித்துவிட்டுப் பேசாமலிருந்தார். அம்மா அதற்குப் பிறகு அவ்வளவு அலட்சியமாக இருக்கவே இல்லை. அத்தகைய பரஸ்பர அன்புக்கிடையே வளர்ந்த நான் புது வாழ்வில் அடி யெடுத்து வைத்து நான்காண்டுகள் உயிரோடு இருக்கிறேன். துக்கத்துடன், கண்ணீருடன், பயத்துடன், ஏமாற்றத்துடன், அருவருப்புடன் வாழ்ந்து கொண்டு இந்த வினாடி வரையில் மூச்சு விட்டுக்கொண்டிருக்கிறேன். நான் இல்லை யென்று நீ வேதனைப் படாதே; மற்றொரு பெண்ணை வாழ வைப்பதற்கே முயற்சி செய். நான் அழுதேனென்று கவலைப்பட வேண்டாம்; மற்றொரு ஜீவனின் கண்ணீருக்கு நீ காரணம் ஆகாதே. நான் கைதியைப்போல் இருந்தேன் என்று ஆவேசப்பட வேண்டாம். மற்றொரு ஜீவனின் சுதந்திரத்தை நீ பறித்து விடாதே. நான் பயந்து பயந்து வாழ்ந்தேன் என்று வெட்கப்படாதே; மற்றொரு ஜீவனை வாழ்வில் பயமுறுத்தாதே. அப்பொழுதுதான் நீ