பிரியா எதற்கு அழுகிறாள் என்பது புரியாமலிருப்பினும் நந்தனும் அவளது தலையை வருடி ஆறுதல் மொழிகளை பேசிக்கொண்டிருந்தான். அரைமணி நேரம் கழித்தும் எந்த மாற்றமும் இன்றி அழுதவாறே நின்றிருந்தவளை பார்த்தவனின் மனதினுள் ஒருவித வெறுமை சூழ்ந்துக்கொண்டது.
ஆறுதல் கூறிக்கொண்டிருந்தவன் அவளிடம் இருந்து எந்த பதிலும் கிடைக்கப்போவதில்லை என்பதை உணர்ந்து... அவளை காணும் பொழுது மட்டும் தன் மனதில் அலையலையாய் பொங்கும் நேசத்தை மறைத்து கோபமுகத்தை காட்டினான்.
"கிருஷ்ணா....." என்று கோபமாய் விளித்தவன் "எதுக்கு இந்த நேரத்துல இங்க வந்து அழுதிட்டு இருக்க..? சொல்லு. எனக்கு நிறைய வேலை இருக்கு... அதெல்லாம் விட்டுட்டு நீ அழுவதை பார்ப்பது தான் என்னோட வேலையா?" என்று தன் நெஞ்சில் முகம் புதைந்திருந்தவளை வேகமாய் விலக்கியபடியே சீறினான். யாருமற்ற தனக்கு ஒரு பற்றுகோலாய் நிற்பவன் என்று நினைத்து, நந்தனிடம் பிரியா தன் மனபாரத்தை கண்ணீரால் கரைக்க... அவனோ அவள் மனதை புரிந்துக்கொள்ளாமல் கோபப்படுகிறான் என்று மனம் சுணங்கினாள்.
யாரிடமும் வழிய போய் ஆறுதல் தேடுவது அவளது இயல்பு இல்லையே... தன்னிடம் நந்தன் காதலை சொன்னதும் கூட மறுக்கத்தானே செய்தாள். ஆனால் இன்று அவளே அறியாமல் நந்தனை முதல்முறையாய் அணைத்து ஆறுதல் தேடிய தருணத்திலே அவளது மனதையும் நன்றாய் உணர்ந்துக்கொண்டாள் பிரியா. இருப்பினும் அவன் பேசிய சொற்கள் அவள் மனதை வெகுவாய் பாதிக்க விரைவில் தன்னை மீட்டுக்கொண்டு "வ... வா... வானதி" என்று திக்கி திணறி மொழிய... அவள் வானதியின் பெயரை சொன்னதிலே பதட்டமானவன்... "சொல்லு வானதிக்கு என்ன ஆச்சு?" என்று பிரியாவை பிடித்து உலுக்கினன்.
தன் கண்களை அழுந்த துடைத்தவள்.. அவன் பிடியை தளர்த்தி நந்தனை நேருக்கு நேராய் உற்று பார்த்து "இங்க தான் லேபர் வார்டுல சேர்த்திருக்கேன்... அதை சொல்லிட்டு நானும் அவ டெலிவரி நேரத்துல கூட இருக்கலாமானு கேட்க தான் வந்தேன்....." என்று மிடுக்குடன் கூறியவள் அவனது பதிலை எதிர்பார்க்காமல் வெளியே சென்றுவிட்டாள். பிரியாவிற்கு நன்றாய் தெரியும் இனி நந்தன் என்ன செய்ய போகிறான் என்று.... அதனாலே அவள் சொல்லவேண்டியதை மட்டும் சொல்லிவிட்டு பிரசவ அறை வாசலில் வந்து நின்றுக்கொண்டாள்.