வானதியின் கன்னங்களில் மறுபடி மறுபடி பிரியா தட்ட அவளின் அசைவற்ற நிலையும், வெறித்த பார்வையும், சில்லிட்ட உடலும் அவள் இறந்துவிட்டாள் என்பதை உறுதியாக்க ப்ரியாவினுள் என்னவோ செய்தது. தன்னையே சுற்றி வந்து தன் தனிமை சிறையை முற்றிலும் உடைத்தெறிந்தவள், இனி தன்னிடம் பேசக்கூட மாட்டாள். அவளது அழகிய அமைதியான முகத்தினை இனி எங்கு காண்பாள்?? அவளின் நேசத்தை, சிரிப்பை, குறும்புத்தனத்தை, துணையை யாரிடம் பார்ப்பாள்? என ப்ரியாவின் மனதினுள் பெரும் உணர்வுபோராட்டம் நடந்துக்கொண்டிருக்க… அது மருத்துவமனை தானும் ஒரு மருத்துவர் என்பதையும் மறந்து பிரியா பெருங்குரலெடுத்துக் கத்த… ப்ரியாவின் குரல் கேட்டு அங்கிருந்த அனைவரும் ஸ்தம்பித்து நின்றனர். திடீரென கேட்ட ப்ரியாவின் குரலில் தன் அறையில் அமர்ந்திருந்த நந்தனும் பிரசவ அறையினுள் நுழைந்தான்.
அவன் வருகையை உணர்ந்து திரும்பிய பிரியாவின் மன காயங்கள் அனைத்தும் அவனை கண்டதும் கோபமாய் வெடிக்க… அவனின் சட்டையை பிடித்து “வானதியை எழுந்திருக்க சொல்லு மீரா… அவளை கொன்னுட்டாங்க… அவளை நீ பார்த்துப்பனு தான இங்க சேர்த்தேன்… இப்போ என்னோட தங்கை எங்க? அவளை என்கிட்ட பேச சொல்லு.... எனக்கு அவ வேணும் மீரா… மறுபடியும் என்கிட்ட வந்து சண்டை போட சொல்லு அவளை… என்னை அக்கானு கூப்பிட சொல்லு…” என்று கண்களில் கண்ணீர் வழிய சரமாரியாய் சொல் அம்புகளை வீச.. வலிநிறைந்த கண்களோடு அமைதியாய் நின்றிருந்தவன்... இதற்குமேல் அவள் பேசினால் அவனது கிருஷ்ணாவிற்கு ஆபத்து என்று உணர்ந்து அங்கிருந்த செவிலியரிடம் "இவங்களுக்கு உடனடியா மயக்க மருந்து கொடுங்க" என்று கட்டளையிட நந்தனின் சொல்லிற்குட்பட்டு அவ்வாறே செய்தாள் ஒரு செவிலி.
அங்கிருந்த அனைவரும் “இந்த பொண்ணு ஏன் இப்படி பண்ணுது?? நந்தன் சார் அ ஏன் குற்றம் சொல்லுது??” என்று புரியாமல் விழிக்க தனக்குள் செலுத்திய மயக்க மருந்தின் வீரியத்தால் என்னென்னவோ முனகியபடியே நந்தனின் கைகளிலே துவண்டு சரிந்தாள் பிரியா. “ கெஸ்ட் ரூம் பிரீயா தான இருக்கு?” என்று கேட்ட நந்தனிடம் ஆம் என்று பதிலளித்தனர். தன் மேல் மயங்கி இருந்தவளை தன் கைகளில் ஏந்தியபடியே செவிலியரின் உதவியுடன் ஒரு அறைக்குள் சென்று அங்கிருந்த கட்டிலில் படுக்கவைத்து அவளது உடல் தேற சலைனை ஊசிமூலம் தொடர்ச்சியாக உட்செல்ல தேவையானவைகளை செய்து முடித்திருந்தான். அந்த செவிலி இருவருக்கும் தனிமை கொடுத்து அங்கிருந்து சென்றுவிட…
ப்ரியாவின் அருகில் அமர்ந்த நந்தனோ தன் முன்னால் வாடி வதங்கி மயக்க நிலையில் இருந்தவளின் கலைந்திருந்த கேசத்தை சரிசெய்து மென்மையாய் வருடிக்கொண்டிருந்தான். அவனது மனமோ “எப்படி இருந்த பொண்ணு டி நீ… இப்போ இந்த நிலைல உன்னை பார்க்கவே ரொம்ப கஷ்டமா இருக்கு…” என்று அரற்றியது. அவனின் நினைவுகளோ அவளை முதன் முதலில் பார்த்த தருணத்திலே நிலைத்து நின்றது.
அவர்கள் ஏழு பேர் கொண்ட குழு… நான்கு பெண்கள், மூன்று ஆண்கள் இவர்களும் நந்தனுடன் கடைசி வருடம் பயில்பவர்கள். தோழிகள் மூவரிடமும் பெயர், ஊர் போன்ற பொதுப்படையான விபரங்களை கேட்டுக்கொண்டிருந்தனர். காவியாவும் சந்தியாவும், தத்தம் அடையாளங்களை கூறிமுடித்திருந்தனர். அவர்களது கேள்விகள் ப்ரியாவை தொடர்ந்தது..