அனைத்தையும் பார்த்துக்கொண்டிருந்த நந்தனின் மனதிலோ “எல்லாரையும் விட இந்த பொண்ணு வித்தியாசமா இருக்கா” என்று நினைத்துக்கொண்டான். அவன் பார்த்தவரை சீனியர் மாணவர்களை கல்லூரி சேர்ந்த கொஞ்ச நாளிலே எதிர்த்து பேசியவள் இவள் மட்டுமே. அவனின் காதலுக்கான விதை அன்றே அவன் மனதில் விழுந்ததோ என்னமோ யார் அறிவார்!!!
தோழிகள் மூவரும் அங்கிருந்து நகர காவியா ப்ரியாவிடம், “உனக்குள்ள ஒரு பெண் சிங்கம் இருக்குனு எல்லாருக்கும் காட்டிட்ட டி” என்று கூறியது அந்த எட்டு நபர்களின் காதுகளிலும் விழுந்தது. அவளுக்கு புன்னகையை பரிசளித்த ப்ரியாவின் நடை நிஜத்திலும் பெண் சிங்கத்தை ஒத்த கம்பீர நடையாகவே இருந்தது. ப்ரியாவை முதன்முதலில் பார்த்த நினைவுகளை அசைபோட்டு கொண்டிருந்த நந்தன் பிரியாவின் அருகில் அமர்ந்த வாக்கிலே உறங்கிவிட்டிருந்தான்.
அலைபேசியை துண்டித்து விட்டு அமைதியாய் அமர்ந்திருந்தவரிடம் "நந்து என்ன சொல்றான் மாமா" என்று பேச்சை தொடங்கினார் அகல்யா. தன் மனைவியிடம் சொல்லிதான் ஆகவேண்டும் என்று சிந்தித்தபடியே
"வானதி பொண்ணுக்கு டெலிவரி யாம் மா, வீட்டுக்கு வர நேரமாகும்னு சொல்றான்" என்றார்.
"அப்போ அவளும் அங்க தான் இருக்காளா....? அதனால் தான் நந்து எனக்கு கூப்பிடவும் மறந்துட்டானா." _ அகல்யா
"ம்ம்ம்ம்...... பிரியா தான் துணைக்கு இருக்காளாம்" என்று சுரத்தே இல்லாமல் கூறினார் நந்தகோபலன்.
"என் பையனோட வாழ்க்கைல விளையாடுறதே இவளுக்கு வேலையா போச்சு... இப்போ தான் அவளால மூணு வருஷமா நம்ம எல்லாரையும் பிரிந்து வெளிநாட்டுல படிப்பை முடிச்சுட்டு வந்து இருக்கான். இவ மறுபடியும் அவனை நம்ம எல்லாரையும் விட்டு தூர அனுப்பிடுவா போல" என்று அந்த தாயுள்ளம் தன் மகன் எப்பொழுதும் தன்னுடனே இருக்க வேண்டும் என ஏங்கியது.
(மகிழ்ந்திரு)