"உங்களுக்கே பயமா இருந்தா ஒரு வயசு பாப்பா எழுந்ததும் ஒரு நாய் குரைச்சுட்டு இருந்தா அந்த பாப்பா என்ன பண்ணும்...." என்று சிரியாமல் கேட்டபடியே தமிழ் இனியை தூக்கிக்கொண்டாள். அவள் தூக்கிக்கொண்டதும் அழுகையை மறந்து தன் தந்தையை பார்த்து சிரித்தது அந்த வாண்டு.
அதை பார்த்தவன் அமைதியாக பின் ஏதோ நினைவு வந்தவனாய் "ஏய் அப்போ நீ என்னை நாய்னு சொல்றியா.???" என்று இடுப்பில் இரு கைகளையும் வைத்துக்கொண்டு செல்லமாய் முறைக்க "நான் அப்படி யாரையும் சொல்லல பா சும்மா ஒரு எக்ஸாம்பிள் தான் சொன்னேன். நீங்க உங்களை நினைச்சுகிட்டா நான் ஒன்னும் பண்ண முடியாது...." என்று சிரித்தபடியே தமிழ் கூற... "உன்னை....." என்று அவன் தமிழை நோக்கி வரும்முன் அவள் குளியலறை சென்று தாழிட்டுக்கொண்டாள். ஆதியின் முகத்திலுமே சிரிப்பின் சாயல்.
அனைவரும் கிளம்பி காலை உணவிற்காக அமர்ந்திருக்க அகல்யா யோசனையோடு நின்றுக்கொண்டிருந்தார். "என்ன யோசனை அகல்யா எங்க பார்த்துட்டு இருக்க?" என்று கேட்டார் நந்தகோபாலன். "ஒன்னும் இல்ல மாமா.... நந்து வரானானு பார்த்தேன்" என்றபடியே அனைவருக்கும் பரிமாறினார்.
ஆதியிடம் திரும்பிய நந்தகோபாலன் "நந்து எங்க டா?" என்று கேட்டார்.
இந்த கேள்வியை எதிர்பார்த்த ஆதியோ "நைட்டு ரொம்ப லேட்டா தான் வந்தான் போல பா. இன்னைக்கும் ஏதோ ஆபரேஷன் இருக்குனு காலைல நான் ஜாகிங் முடிச்சுட்டு வந்த அப்போவே கிளம்பிட்டான் பா" என்றவன் மனதிலோ "அடேய் உன்கூட சேர்ந்து என்னையும் பொய் சொல்ல வைச்சுட்டியே டா.... இன்னைக்கு வா உனக்கு இருக்கு..." என்று தன் தம்பியை திட்டியபடியே பொங்கலை ருசித்துமுடித்திருந்தான்.
ஆதியும், சக்திவேல் தாத்தாவும் அவர்கள் சில்க் ஹவுஸ் நோக்கி செல்ல, முத்தமிழ் இனி பாப்பாவிற்கு உணவு கொடுத்துக்கொண்டிருக்க, அகல்யா சமயலறையில் பாத்திரங்களை ஒதுக்கிக்கொண்டிருக்க, அந்நேரத்தில் சரியாய் நந்தகோபாலனுக்கு மருத்துவமனையில் இருந்து அழைப்பு வர, அதில் கேள்விப்பட்ட செய்தியில் அவரின் இருபுருவங்களும் யோசனையில் முடிச்சிட்டது.
(மகிழ்ந்திரு)