நந்தன் பயிற்சி மருத்துவனாய் அங்கு பணிபுரிந்த சமயத்தில் ப்ரியாவை பலமுறை பார்த்திருக்கிறான் சிலமுறை தொடர்ந்தும் சென்றிருக்கிறான். அவளை பற்றி அவன் முழுதும் அறிந்துகொள்ளவில்லை தான் ஆனாலும் ஓரளவேனும் அறிந்திருந்தான்.
குழந்தைகளுடன் செல்லம் கொஞ்சும் சில நேரங்களில் அவளும் ஒரு குழந்தை;
அவளின் கோபத்தை கண்டால் சிலநேரங்களில் அவள் சண்டாளி;
சிரிக்கும் போது சிலநொடிகள் கண்டால் சிலிக்கான் வேலி தோற்கும் தேவதை அவள்;
உதவி என்று கேட்டால் உரக்கசொல்லாமல் உண்மையாகவே கொடுத்துவிட்டு மறக்கும் உத்தமி அவள் ;
சத்தமாக சண்டையிட்டாலும் சுத்தமாக வெறுக்ககூட தெரியாத வெகுளி அவள்;
நினைவுகளை புரட்டும்போது மட்டும் கண்ணீருக்கு சொந்தக்காரி;
நிமிஷங்களை கடக்கும்போது சந்தோஷத்தின் பந்தக்காரி;
வேடிக்கை பார்த்துக்கொண்டே வாழ்வை ஓட்ட நினைப்பவள்;
வேடத்திற்குள் ஒளிந்துக்கொண்டு யாருமில்லா பெட்டிக்குள் யாரேனும் இருப்பார்களா?என தேடும் யாசகி;
அன்பை மட்டுமே பரிசளிக்க தெரிந்த ஆதாமின் காதலி
சிலநேரங்களில் அவளுள் அவளை தேடுகிறாள்
ராட்சசியாய் , தேவதையாய் ,ராங்கிக்காரியாய், தோழிகளுக்கு கோபம் முடிந்த பெட்டகமாய், இன்னும் சிறுபிள்ளை தனம் மாறாத பெறும்மழலை அவள். நந்தன் அறிந்தவை இவை அனைத்தும்…..
தன் தந்தையை போல காதலித்து திருமணம் செய்ய நினைத்தவன் தான் அவனும் இருப்பினும் அவனுக்கு பிரியாவின் மேல் உண்டான நேசத்திற்கு பெயர் காதலா என்று கேட்டால் அவனுக்கு பதில் தெரியாது. அந்த நிலையிலே அவன் அவளை காதலிப்பதாய் சொன்னான். ஊர் மெச்சும் அழகி அல்ல அவள், பெரும் செல்வந்தரின் மகளும் அல்ல, பேச்சினை துணை கொண்டு சாதிப்பவளும் அல்ல, உறவுகள் பற்றி அறிந்தவளும் அல்ல, வெளி உலகை அதிகம் கண்டு ரசித்தவளும் அல்ல. அவள் அறிந்தது அன்னை ஆசிரமமும் அவளது மருத்துவ படிப்பும் தான்.