”ஸரஸு! பேச ஆரம்பித்தால் ஓய மாட்டாயே நீ? அவனுந்தான் என்ன? பாட்டுப் பைத்தியம்; பேச்சுப் பைத்தியமும்கூட” என்று அத்தை ஸ்வர்ணம் அதட்டினாள்.
ஸரஸ்வதி மாடிப் படிகளில் மெதுவாக இறங்கினாள். "சிந்தை அறிந்து வாடி, செல்வக் குமரன் - சிந்தை அறிந்து வாடி” என்று பாடிக்கொண்டு, அத்தானைப் பார்த்துக் கலகலவென்று! சிரித்தாள் அந்தப் பெண் ஸரஸ்வதி. சிரிப்பில் சேர்ந்துகொண்ட ஸ்வர்ணம், ஸரஸ்வதியின் அருகில் வந்து வாஞ்சையுடன் அவள் தலையைத் தடவிக் கொடுத்தாள். பிறகு, ”ஸரஸு! நீ என்னதான் உன் அத்தானுடன் கபடமில்லாமல் பழகினாலும், பிறர் தவராக நினைப்பார்கள், அம்மா. போகிற இடத்திலெல்லாம் நீ பேசாமல் இருக்கிறதில்லை. இந்தக் காலத்தில் நல்லது எது, கெட்டது எது என்பதை யார் ஆராய்ந்து பார்க்கிறார்கள்? நான் சொல்கிறேனே என்று கோபித்துக்கொள்ளாதே. ஸரஸு!" என்றாள் ஸ்வர்ணம்.
ஸரஸ்வதி, அன்புடன் அத்தையை ஏறிட்டுப் பார்த்தாள்.
”நான் தான் உங்களுடன் பெண் பார்க்க வரப்போகிற இல்லையே, அத்தை. நீங்கள் ஏன் கவலைப்பட வேண்டும்?" என்று கபடமில்லாமல் கேட்டாள்.
ஸ்வர்ணத்தின் கண்களில் நீர் நிறைந்துவிட்டது. துஷ்டத்தனம் செய்யும் குழந்தையைத் தாய் அதட்டியதும், அதன் பிடிவாதம் அதிகமாவதைப்போல் இருந்தன, ஸரஸ்வதியின் பதிலும், செய்கையும்.
”உன்னை நான் என்ன சொல்லிவிட்டேன் ஸரஸு? லக்ஷனமாக, கன்னிப் பெண்ணாக நீ என்னுடன் வராமல், அழகாக இருக்கிறது நான் ரகுவை அழைத்துப்போய் அவர்கள் எதிரில் நிறுத்துவது? நீ வராவிட்டால், பாட்டுப் பரீக்ஷையைத்தான் யார் நடத்துவது? போ, போ. புறப்படுவதற்கு ஏற்பாடு செய்து கொள், போ" என்று உரிமையுடன் ஸரஸ்வதியை அதட்டினாள் ஸ்வர்ணம்.
அதென்னவோ வாஸ்தவம். அத்தான் ஒரு பாட்டுப் பைத்தியம் என்று தெரிந்த ஸரஸ்வதி, பெண் பார்க்கப் போகும் இடங்களிலெல்லாம் ஒரு சிறிய சங்கீதப் பரீட்சையே வைத்து விட்டாள் எனலாம். சில பெண்கள் அறுபது கீர்த்தனங்கள் பாடமென்று சொல்லி விட்டு, ஸ, ப,வுக்கு வித்தியாசம் தெரியாமல் விழித்தார்கள். சிலரின் சங்கீதம் ஒரே சினிமா மயமாக இருந்தது! கச்சிதமாக நாலு பாட்டுகள் பாடுகிறேன் என்று அதுவரையில் பார்த்த பெண்கள் யாரும் முன் வரவில்லை. ஸரஸ்வதி ஒரு தினம் விளையாட்டாக ரகுபதியிடம், "அத்தான்! உனக்குத் தான் வீணை வாசிக்கத் தெரியுமே. சங்கீதமே தெரியாத பெண்ணாகப் பார்த்துக் கல்யாணம் பண்ணிக்கொண்டுவிடேன்.' பிறகு நீயே பாட்டுக் கற்றுக்கொடுத்துவிடலாம்" என்றாள்.
"ஆமாம்.. கல்யாணம் ஆன பிறகு, பிள்ளைகள் மாமனார் வீட்டில் இருந்து கொண்டு,