மேற்படிப்புப் படித்துப் பாஸ் செய்கிற லக்ஷணத்தைப்போலத்தான் இதுவும் இருக்கும்!" என்றாள். அத்தை ஸ்வர்ணம் சிரித்துக் கொண்டே .
"அத்தானுடைய சுபாவம் அப்படி இல்லை அத்தை. அவனுக்கு லட்சியம் ஒன்றுதான் முக்கியம்" என்றாள் ஸரஸ்வதி.
படுக்கையில், பாதி திறந்த விழிகளுடன் பழைய நினைவுகளில் மனத்தை லயிக்க-விட்டிருந்த ரகுபதிக்குப் பளிச்சென ஞாபகம் வந்தது இந்தச் சம்பாஷணை. அதோடு, யார் லட்சியவாதி; அவனா, ஸரஸ்வதியா என்ற கேள்வியும் எழுந்தது. எப்படிப் பார்த்தாலும், தன்னை விட ஒருபடி மேலாகவே கண்டான் அவளை. நல்ல சங்கீத ஞானமும், நிறைந்த சாரீர சம்பத்தும் பெற்றவள் அவள். அழகில் மட்டுந்தான் குறைந்தவளா? தாழம்பூ மேனியும் சுருண்டு, அடர்த்தியாக, அலை பாயும் கூந்தலும் மருண்ட விழிகளும் குளிர்ந்த உதடுகளும் தாமரை மலர் போன்ற கரங்களும் பெற்று அழகியாகத்தான் இருந்தாள். அதோடு ' குடும்பப் பெண்' என்பதற்கு இலக்கணமாக விளங்குபவள். உஷக்காலத்தில், வெள்ளி முளைத்திருக்கும்போது எழுந்து, முகம் கழுவி, பொட்டிட்டு, ஸ்வாமிக்கு விளக்கேற்றி, வீணையுடன் இழையும் மெல்லிய காலில் பாட ஆரம்பித்து விடுவாள் அவள். அவள் பாட்டைக் கேட்ட பிறகுதான் அந்த வீட்டில் மற்றவர்கள் எழுவார்கள்.
எனினும் ஒரே ஒரு குறை அவளிடம். அதுவும், ரகுபதியால் ஏற்பட்ட குறைதான். பால்யத்தில் ரகுபதியின் மாமன் மகளாகிய ஸரஸ்வதியும், அத்தான் ரகுபதியும் ஒன்றாக விளையாடியபோது ரகுபதி விளையாட்டாகப் பின்புறம் வந்து அவள் கால்களை இடறி விட்டபோது ஸரஸ்வதி விழுந்துவிட்டாள். சாதாரண விளையாட்டு, வினையாகி ஒரு கால் எலும்பு முறிந்து, நிரந்தரமான ஊனம் ஏற்பட்டுவிட்டது. அந்தக் குறை ஸரஸ்வதியின் மனத்திலும் அழியாத - வடுவை ஏற்படுத்திவிட்டது. என்னதான் அழகாக இருந்தாலும், என்னதான் சங்கீதம் தெரிந்திருந்தாலும், ஊனம் ஊனந்தானே! ரகுபதியும் பெரியவனாகிய பிறகு, தான் தவறுதலாகச் செய்துவிட்டதை நினைத்து வருந்தியிருக்கிறான். ”இசைக்கும், கலைக்கும் என் வாழ்க்கையை அர்ப்பணித்து விடுகிறேன் அத்தான். எனக்காக நீ ஒன்றும் வருத்தப்பட வேண்டாம்" என்று ஸரஸ்வதி ரகுபதிக்கு எவ்வளவோ முறைகள் தேறுதல் கூறியிருக்கிறாள்.
ஆனால், ஒவ்வொரு தினமும் ஸரஸ்வதி, உள்ளம் உருகிப் பாடும் போதெல்லாம் ரகுபதி இந்தப் பழைய சம்பவத்தை நினைத்துக் கொண்டு ஏங்குவான். தானே அவளை மணந்து கொண்டு விட்டால் அவளிடம் இருக்கும் குறையைப் பாராட்டாமல் இருக்க முடியும் என்று நினைத்து, அவளிடம் அவன் அதைப் பற்றிப் பிராஸ்தாபித்தபோது, அவள் ஒரு குழந்தையைப்போல் கபடமில்லாமல் சிரித்தாள். வெண்கல மணி ஒலிப்பதுபோல் கலகலவென்று சிரித்து விட்டு, "அத்தான்! பாபம் செய்தவர்கள் பிராயச்சித்தம் செய்து கொள்ள வேண்டியது அவசியந்தான்.