Flexi Classics தொடர்கதை - இருளும் ஒளியும் - 02 - ஸரோஜா ராமமூர்த்தி
இருளும் ஒளியும் : 2. மாமியார் நாட்டுப்பெண்
இதே மாதிரி அன்று அதிகாலையிலிருந்தே சாவித்திரியின் வீட்டிலும் கேலிப்பேச்சும் சிரிப்பும் நிறைந்திருந்தன. பிள்ளை வீட்டார் பெண் பார்க்க வரப்போகிறார்கள் என்று அறிந்து ஒவ்வொருவரும் ஓடி ஆடிக் குதூகலத்துடன் வேலை செய்து கொண்டிருந்தார்கள். சாவித்திரி நொடிக்கு ஒரு தரம் நிலைக் கண்ணாடியின் எதிரில் நின்று தன்னைக் கவனித்துக்கொள்வதில் முனைந்திருந்தாள். சாவித்திரியின் தாய் மங்களம் - வழக்கமாகத் தன் மாமியாருக்குப் பயப்படுகிறவள்கூட - அன்று தானும் கூடிய விரைவில் மாமியார் ஆகப்போகிறோம் என்கிற பெருமிதத்தில், சற்று இரைந்தே பேசிக்கொண்டிருந்தாள். சாவித்திரியின் தங்கை சீதாவுக்குத் தான் வீட்டிலே அதிகம் வேலைகள் காத்துக்கிடந்தன. சரசரவென்று மாடிக்கும் கீழுக்கும் ஹாலுக்கும் காமரா அறைக்குமாகத் தன் மேலாடை பறக்கத் திரிந்து கொண்டிருந்தாள் அவள்.
பெண்ணுக்குக் கல்யாணமென்றால் தாய்க்குத்தான் அதில் பெருமையும் பங்கும் அதிகம் என்று கூறலாம். பிள்ளை வீட்டார் வந்து சாவித்திரியைப் பார்த்துத் தம் சம்மதத்தை அறிவிப்பதற்கு முன்பே மங்களம் பெண்ணுக்குச் செய்ய வேண்டிய சீர் வரிசைகளைப் பற்றித் தன் கணவர் ராஜமையரிடம் பேசினாள்.
"மாப்பிள்ளைக்குத் தீபாவளிக்கு வைர மோதிரம் போடுவதாகச் சொல்லிவிடுங்கள். இப்போது சாவித்திரிக்குக் கணிசமாக நாலு வளையல்கள் செய்தாக வேண்டும். மோதிரச் செலவையும் சமாளிக்க முடியாது. அப்புறம் சம்பந்திகள் எதிரில் வழவழ
என்று பேசிவிடாதீர்கள்" என்றாள் மங்களம் காபியை ஆற்றிக் கொண்டே.
ராஜமையர், "ஹும்.. ஹும்.." என்று தலையை ஆட்டினார். அவருக்குப் பதில் சாவித்திரியின் தமையன் சந்துரு பேச ஆரம்பித்தான்: ”உன் பெண்ணுக்குத்தான் ஒரு ஜதை வளையல்கள் குறைவாக இருக்கட்டுமே அம்மா. மாப்பிள்ளைக்கு இப்பொழுதே மோதிரம் போட்டுவிடலாம். நாலு பேருக்குத் தெரிந்து எந்த மரியாதையையும் செய்தால் நன்றாகச் சோபிக்கும்" என்றான் சந்துரு.
அந்த வீட்டில் தனக்குத் தெரியாமல் ஒன்றும் நடக்கக் கூடாது என்கிற சுட்சியைச் சேர்ந்தவள் சாவித்திரியின் பாட்டி. ஆகவே, "ரொம்ப நன்றாக இருக்கிறதே! கல்யாணம் பண்ணுகிற குழந்தைக்குக் கை நிறைய வளையல்கள் வேண்டாமாடா, அப்பா?” என்று கேட்டாள் பாட்டி.
இவ்வளவு வாதப் பிரதிவாதங்களுக்கும் ராஜமையர் தலையைக்கூட அசைக்காமல் சாய்வு நாற்காலியில் சாய்ந்து கம்பீரமாகப் புன்னகை செய்து கொண்டு படுத்திருந்தார். குடும்பத் தலைவர் என்கிற அந்தஸ்து எவ்வளவு பொறுப்பு வாய்ந்தது என்பதை நினைத்தே அவர் யோசனையில் ஆழ்ந்திருந் தார் என்று கூறலாம். வீட்டிலே கல்யாணச் சீர் வரிசைகளைப் பற்றி ஒவ்வொருத்தர் அபிப்பிராயம், ஒவ்வொரு விதம் இருக்கிறது. பணச் செலவை எப்படியோ