சரிக்கட்டி சமாளிக்கும் திறன் அவரிடந்தானே இருக்கிறது? அதைப்பற்றி யாராவது நினைத்துப் பார்க்கிறார்களா? இவ்வாறு எண்ணித்தான் அவர் புன்னகை புரிந்திருக்க வேண்டும்.
ராஜமையர் காபி சாப்பிட்ட டவராவையும் டம்ளரையும் எடுத்துக்கொண்டு மங்களம், "ஒன்றுக்கும் உங்கப்பா வாயைத் திறக்கமாட்டார். வீடு பற்றி எரிந்தால்கூட, 'அதென்ன புகைச்சல்?' என்று கேட்கிறவராயிற்றே!" என்று கூறிக் கொண்டே விசுக்கென்று சமையற்கட்டிற்கு எழுந்து சென்று விட்டாள்.
அதற்கும் ஒரு சிரிப்புச் சிரித்துவிட்டு ராஜமையர், "சீதா! அவர்கள் எல்லோரும் வருவதற்கு மூன்று மணி ஆகும். அதற்குள் சாவித்திரியின் அலங்காரமெல்லாம் முடிந்து விடும் அல்லவா?" என்று மகளைக் கூப்பிட்டு விசாரித்தார்.
சீதா ஏதோ வேலையாக அந்தப் பக்கம் வந்தவள், தகப்பனார் கேட்ட கேள்விக்குப் பதில் கூறாமல் இரு கரங்களிலும் நான்கு பட்டுப் புடைவைகளை வாரி எடுத்துக் கொண்டு அவர் கேட்டதற்குத் தலையை மட்டும் அசைத்துவிட்டு அந்த வீட்டுக் காமரா அறைக்குள் சென்று கதவைத் தாழிட்டுக் கொண்டாள். அந்த அறைக்குள் சாவித்திரி, பீரோவிலிருக்கும் ஒவ்வொரு புடைவையாக எடுத்து மத்தியான்னம் பிள்ளை வீட்டார் வரும்போது எதை உடுத்துக் கொண்டால் அழகாக இருக்கும் என்று ஆராய்வதில் முகாந்திருந்தாள். அவளிடமிருந்த ஏழெட்டுப் பட்டுப் புடைவைகளில் ஒன்றாவது அவள் மனத்துக்குப் பிடித்ததாக இல்லை. கடையிலிருந்து வாங்கும்போது என்னவோ அந்தப் புடைவைகளை ஆசையுடன் தான் வாங்கிக்கொண்டாள். நாழிக்கொரு மோஸ்தரும், வேளைக் கொகு அலங்காரமுமாக மாறி மாறி வரும் புடைவை ரகங்களைப் பார்த்தபோது அந்தப் புடைவைகள் அவருக்குப் பழைய ரகங்களாகத் தோற்றமளித்தன. சலிப்புடன் அவள் பீரோவைப் பட்டென்று மூடும்போது, சீதா கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தாள். கையிலிருந்த புடைவைகளைச் சோபாவில் போட்டு விட்டு, "எதையாவது சீக்கிரம் நிச்சயம் பண்ணு சாவித்திரி. எனக்குக் கொள்ளை வேலை காத்துக் கிடக்கிறது" என்று கூறினாள் தமக்கையிடம்.
சாவித்திரியும் சீதாவும் உடன் பிறந்த சகோதரிகளாக இருந்தாலும் குணத்தில் ஒருவருக்கொருவர் அதிக வித்தியாசத்தைப் படைத்தவர்கள். எவ்வளவு ஆடை, ஆபரணங்கள் இருந்தாலும் சாவித்திரியின் மனம், போதும் என்று ஒப்புக் கொள்ளாது. சீதாவுக்கோ சாதாரண வாயில் புடைவை இருந்தால் போதும். இருவருக்கும் பெற்றோர்கள் ஒரே மாதிரி ஆடை, ஆபரணங்கள் வாங்கி அளித்திருந்தாலும் சீதாவின் பொருள்கள் தாம் சாவித்திரிக்குப் பிடித்தமானவைகளாக இருக்கும்.
சாவித்திரி, சோபாவில் கிடந்த புடைவைகளைப் புரட்டிப் பார்த்தாள். தன்னுடைய-வையாக