பிள்ளைக்குச் சங்கீதம் என்றால் ரொம்ப ஆசையாம். சீக்கிரத்திலேயே சங்கீதப் பள்ளிக்கூடம் ஒன்று ஆரம்பிக்கப் போகிறானாம்!" என்றாள் மங்களம்.
"பாட்டுப் பள்ளிக்கூடம் வைப்பது ஒரு உத்தியோகமா! போகிறதே இந்தக் காலத்துப் பிள்ளைகளுக்குப் புத்தி! ஆயிரம் ஆயிரமாகக் கொட்டிப் பரீக்ஷை பாஸ் பண்ணிவிட்டுச் செருப்புக் கடை வைத்துச் சம்பாதிக்கிறேன் என்று ஆரம்பிக்கவில்லையா நம்ப சுப்ரமணியின் பிள்ளை குண்டு! கர்மம், கர்மம்!" என்று தலையில் இரண்டு போட்டுக் கொண்டாள் பாட்டி.
பாட்டிக்கு வயசு எழுபது ஆனாலும் வீட்டில் நடக்கும் ஒவ்வொரு விஷயமும் தனக்குத் தெரியாமல் நடக்கக்கூடாது என்கிற எண்ணம் வாய்ந்தவள். 'பிள்ளைகளை வளர்த்துப் பெரியவர்கள் ஆக்கியாயிற்று. பெண்களும் புக்ககம் போய் விட்டார்கள். பேரன் பேத்திகள் வீடு நிறைய இருக்கிறார்கள். செய்த வேலைகள் போதும், இனி ஓய்வு பெறலாம்' என்கிற எண்ணம் பாட்டிக்குக் கிடையாது. 'நாம் ஒன்றிலும் தலையிடக் கூடாது: கிருஷ்ணா, ராமா என்று காலத்தை ஓட்டவேண்டும்' என்று பாட்டி அநேக முறைகள் மனத்தை வைராக்கியத்துக்கு இழுத்து வந்திருக்கிறாள். அந்த வைராக்கியம் அரை நிமிஷங் கூட நிலைக்காது. மாமியாருக்கும் நாட்டுப் பெண்ணுக்கும் ஏதாவது ஒரு காரணத்தைப்பற்றித் தினம் சண்டையும் பூசலும் ஏற்படும். இருவரும் நாள் கணக்கில் பேசமாட்டார்கள். ஆனால், பாட்டி சாப்பிடாமல், மங்களம் அந்த வீட்டில் ஜலபானம் பண்ணமாட்டாள். வயசான மனுஷி என்கிற மரியாதையும் அபிமானமுந்தான் காரணம். ராஜமையருக்கு இலை போட்டுப் பரிமாறும்போதே, மாமியாருக்கும் இலை போட்டு விடுவாள் மங்களம், மாமியார் சொன்ன சொற்கள் மனத்தை வாட்டி எடுத்தாலும், அவருக்குச் செய்யும் சிசுருஷையில் கொஞ்சம் கூடக் குறைவு இராது.
ராஜமையர் எதையும் காதில் வாங்கிக் கொள்ள மாட்டார். மனைவியைத் தனிமையில் சந்திக்கும்போதெல்லாம், "மங்களம்! நீ சாப்பிட்டாயா? உடம்பைக் கவனித்துக் கொள்ளாமல் வேலை வேலை என்று பறக்கிறாயே!" என்று அன்புடன் கடிந்து கொள்வார்.
"ஆமாம், வேலை செய்யாவிட்டால் உங்கள் வீட்டில் எனக்கு யார் சோறு போடுகிறார்கள்!" என்று நிஷ்டுரமாகக் கேட்பாள் மங்களம். "உங்கள் வீடா? அடி அசடே! வீட்டுக்கு நீதானே எஜமானி? நீதானே இந்தக் கிருகத்தில் அன்னபூரணியாக இருக்கிறாய்? நான் கூட உன்னிடந்தானே, 'தேஹி' என்று வர வேண்டும்" என்று கூறி, அவள் கரங்களை அன்புடன் பற்றித் தம் கைகளில் சேர்த்துக்கொள்வார். அவருடைய இன்ப ஸ்பரிசத்தில் ஆயிரம் வருஷங்களின் கஷ்டங்களை மறந்து விடுவாள் மங்களம்.
இவ்விதம் மனஸ்தாபம் மூண்டு எழுந்தாலும் அன்பு நீரால் அத்தம்பதிகள் அதை அணைத்து விடுவார்கள். மேலே பற்றி எரிய வழி இல்லை அல்லவா?
அடுப்பிலிருந்த வாணலியை இறக்கிவிட்டு மங்களம், மாமியாருக்கு இலை போட்டாள்.