பஞ்சபாத்திரத்தில் ஜலத்துடன் 'நச்' கென்று இலை முன்னால் வந்து உட்கார்ந்த பாட்டி, "ஆமாம். பிக்கல், பிடுங்கல் இல்லை என்று சொன்னாயே. உனக்கு மாத்திரம் இங்கே என்ன பிடுங்கல்? இந்த வீட்டுக்கு யார் வரக் காத்துக் கிடக்கிறார்கள்? கூப்பிட்டால் வரப்போகிறார்கள். இல்லாவிட்டால் இல்லை" என்று மனஸ்தாபத்தைப் பாதியில் நிறுத்த இஷ்டமில்லாமல் தொடர்ந்து ஆரம்பித்தாள்.
மங்களத்தின் கண்களிலிருந்து பொலபொலவென்று கண்ணீர் வழிந்தது. சமையலறைப் பக்கம் ஏதோ வேலையாக வந்த சந்துரு தாயின் தர்மசங்கடமான நிலையை உணர்ந்து. அவளை ஜாடையாகக் கூப்பிட்டான்.
"மாப்பிள்ளை வந்து நாளைக்குப் பேரன், பேத்தி எடுக்கப் போகிறாய். எதற்கெடுத்தாலும் குழந்தை மாதிரி அழுது கொண்டு நிற்கிறாயே அம்மா. பாட்டி சொல்வதைக் காதில் வாங்காமல் உன் வேலையைக் கவனிக்க மாட்டாயா?" என்று சந்துரு அவளை அன்புடன் கடிந்து கொண்டான்.
--------------
தொடரும்