(Reading time: 9 - 17 minutes)
Irulum oliyum
Irulum oliyum

Flexi Classics தொடர்கதை - இருளும் ஒளியும் - 03 - ஸரோஜா ராமமூர்த்தி

இருளும் ஒளியும் : 3. பாடத் தெரியுமா?

மாலை நான்கு மணிக்கு ஸரஸ்வதி, ஸ்வர்ணம், ரகுபதி மூவரும். ராஜமையர் ரயிலடிக்கு அனுப்பி இருந்த மாட்டு வண்டியில் சாவித்திரியின் வீட்டுக்கு வந்து சேர்ந்தார்கள்.

"வாருங்கள் அம்மா! வா ..ம்மா!" என்று மங்களம் வாய் நிறைய உபசாரத்துடன் கூப்பிட்டு, எல்லோரையும் உள்ளே அழைத்துப் போனாள். ”இவன்தான் என் மூத்த பையன் சந்திர சேகரன்" என்று ராஜமையர் தம் பிள்ளையை வரப்போகும் மாப்பிள்ளைக்கு அறிமுகம் செய்து வைத்தார். "இப்படி உட்காருங்கள் மாமி" என்று கூறி, சீதா, ரத்தினக் கம்பளம் ஒன்றை எடுத்து விரித்து உபசரித்தாள். ஸரஸ்வதியும் ஸ்வர்ணமும் அமர்ந்து, லோகாபிராமமாகப் பேசிக் கொண்டிருந்தனர். சம்பிரதாயப்படி சிற்றுண்டியும் காபியும் சாப்பிட்டு முடிந்த பின்பு ஸரஸ்வதி தன்னுடன் கொண்டுவந்திருந்த பையிலிருந்து பழம், பாக்கு, வெற்றிலை, புஷ்பம் முதலியவைகளை எடுத்து ஒரு தட்டில் வைத்தாள்.

”பெண்ணை வரச்சொல்லுங்கள் மாமி" என்றாள் ஸரஸ்வதி. வீணையைப் பழிக்கும் அவள் குரல் இனிமையைக் கேட்டுச் சந்துரு. அடிக்கடி அவளைத் திரும்பிப் பார்த்தான். சாந்தமும் அழகும் கொண்ட அந்த முகவிலாசத்தை அவன் - இதுவரை பார்த்த - எந்தப் பெண்ணிடத்திலும் கண்டதில்லை என்று நினைத்தான். ஆனால், கருணை வடியும் இந்த முகத்தை எங்கோ பார்த்த ஞாபகம் ஒன்று லேசாக அவன் மனத்தில் தோன்றியது. எங்கே பார்த்திருக்க முடியும்? போன வருஷம் வடக்கே போய் வந்தானே அங்கே யாரையாவது கண்டிருப்பானா? சிறிது நேரம் யோசனையில் மூழ்கி இருந்தான் சந்துரு. திடீரென்று ஏதோ நினைவு வந்தவனாகக் கூடத்தில் மாட்டப்பட்டிருந்த ஸரஸ்வதி தேவியின் படத்தைப் பார்த்தான் சந்துரு. அந்த முகத்தில் நிலவும் கம்பீரமும் சாந்தமும் இந்தப் பெண்ணிடம் ஏதோ கொஞ்சம் இருக்கிறது. அது போதாதா அவளை எழிலுள்ள வளாகக் காட்டுவதற்கு! சகல கலாவாணியாகிய ஸரஸ்வதி தேவியின் கடாட்சத்துக்குப் பாத்திரமானவள்தானே இந்தப் பெண்ணும்! வெகு அற்புதமாக வீணை வாசிக்கிறாள். அகத்தின் அழகு முகத்தில் சுடர்விடாதா! அறிவுக் களை என்பது அலாதியானது அல்லவா!

சந்துருவின் கண்களை ஸரஸ்வதியின் நீண்ட நயனங்கள் சந்தித்துப் பூமியை நோக்கித் தாழ்ந்தன. அவன் தன்னையே விழுங்கிவிடுவதைப்போல் பார்ப்பதை அறிந்த ஸரஸ்வதி. ”அத்தான்! பெண்ணைச் சரியாகப் பார்த்துக்கொள்; பிறகு ஏதாவது குறை சொல்லாதே!" என்று கூறி, முறுவலித்தாள்.

சந்துரு சுய நினைவு வந்தவனாகத் திரும்பிப் பார்த்தான். சாவித்திரி, பெரியவர்கள் எல்லோருக்கும் நமஸ்காரம் செய்து விட்டு உட்கார்ந்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.