"உம்..... பெண்ணை நல்லதாக ஒரு பாட்டுப் பாடச் சொல்லுங்களேன், மாமி" என்றாள் ஸரஸ்வதி.
"எங்கள் வீட்டில் யாருக்குமே நன்றாகப் பாடத் தெரியாதே" என்று கூறினாள் சீதா, ஸரஸ்வதியைப் பார்த்து.
தெரியாது! சமைக்கத் தெரியாது. குடும்பம் நடத்தத் தெரியாது. பாடத் தெரியாது. பேசத் தெரியாது! இந்தத் ’தெரியாது' என்கிற சொல் எவ்வளவு பேரைக் காப்பாற்றுகிறது. தெரியுமா? 'பாவம்! அவனுக்கு ஒன்றுமே தெரியாது!' என்று பிறரை அநுதாபப்படச் செய்கிறதும் இந்தத் ’தெரியாது' என்கிற சொல்தான்.
"இந்த வீட்டில் யாரோ பாட்டுக் கற்றுக்கொள்ளுகிறார்கள். அதற்கு அத்தாட்சியாக அதோ தம்பூர் வைத்திருக்கிறது. ஏன் ஸார்! ஒரு வேளை படித்துப் படித்து என்னத்தைப் புரட்டப் போகிறோம் என்று. நீங்கள் பாட்டுக் கற்றுக்கொள்கிறீர்களோ?" என்று கேலிப் புன்னகையுடன் ரகுபதி சந்துருவைப் பார்த்துக் கேட்டுவிட்டுச் சாவித்திரியைக் குறும்பாகப் பார்த்தான்.
சாவித்திரி, கோபத்தால் முகம் சிவக்கச் சீதாவைப் பார்த் தாள். 'நாளெல்லாம் வள வளவென்று அரட்டை அடித்துக் கொண்டிருப்பாயே. இப்போது என்ன ஒரே பேசா மடந்தை ஆகி விட்டாய் நீ?' என்று கேட்பதுபோல் சாவித்திரி கோபக் கண் களால் தன் தங்கையைப் பார்த்தாள்.
சீதா, அர்த்த புஷ்டியுடன் ஒரு சிரிப்புச் சிரித்தாள். அப்புறம் ரகுபதியின் பக்கம் திரும்பி, "வீணாகச் சாவித்திரியின் பேரில் சந்தேகப்படாதீர்கள்.. நான் தான் இந்த வீட்டில் பாட்டுக் கற்றுக்கொள்கிறவள். எனக்காகத் தான் தம்பூர் வாங்கியிருக்கிறார்கள். சாவித்திரி அதைத் தன் விரலாலும் தொட்ட தில்லை!" என்று கூறிவிட்டுக் 'களுக்' கென்று சிரித்தாள்.
"அப்படியானால் யாராவது பாட்டுத் தெரிந்தவர்கள் தான் இரண்டு பாட்டுகள் பாடக்கூடாதா? என்ன ஸரஸு! இந்தப் பூனை யும் பாலைக் குடிக்குமா என்று உட்கார்ந்திருக்கிறாயே? நீதான் பாடேன். கல்யாணப் பெண்தான் பாடவேண்டும் என்று எந்தச் சாஸ்திரத்திலாவது சொல்லியிருக்கிறதா?" என்று ரகுபதி உரிமையுடன் ஸரஸ்வதியிடம் கூறினான்.
"பாடித்தான் ஆகவேண்டும் என்றால், கட்டாயம் பாடிவிடுகிறேன், அத்தான்" என்று சரஸ்வதி கூறிவிட்டு, சீதாவின் பக்கம் திரும்பி, "சீதா! நீ போய்த் தம்பூரை எடுத்து வா அம்மா" என்றாள்.
ஸரஸ்வதி பாடப்போகிறாள் என்பதைக் கேட்டவுடன் சந்துருவின் மனம் சந்தோஷத்தில் ஆழ்ந்தது. தம்பூரை மீட்டிக் கொண்டு மெல்லிய குரலில் அவள் பாட ஆரம்பித்ததும் அங்கிருந்தவர்கள் எல்லோரும் மெய்ம் மறந்து உட்கார்ந்திருந்தனர். 'ஆஹா! இவ்வளவு அழகும் சங்கீத ஞானமும் உடைய பெண்ணைவிட்டு, அசலில் இவர்கள் பெண் தேடுவானேன்?' என்று சந்துரு நினைத்து வியந்தான். மங்களமும் இதையே நினைத்து ஆச்சரியப் பட்டாள். கூடத்தில்