மாட்டியிருந்த ஸரஸ்வதி தேவியின் படத்திலிருந்தே, மானிட உருக்கொண்டு இந்தப் பெண் வந்து உட்கார்ந்து பாடுகிறதோ என்று ஐயம் ஏற்படும் நிலையைச் சிருஷ்டித்து விட்டாள் ஸரஸ்வதி. அவள் உள்ளம் உருக, 'பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப் பரிந்து' என்கிற பாடலைப் பாடியபோது, எல்லோர் உள்ளமும் அந்தப் பக்திப் பிரவாகத்தில் லயித்து, அதிலேயே அழுந்தி விட்டன என்று கூறலாம். ஸரஸ்வதி, கச்சிதமாக நான்கு கீர்த்தனங்கள் பாடித் தம்பூரை உரைக்குள் இட்டு, மூடி வைத்துவிட்டு, உட்கார்ந்தது தான் எல்லோரும் சுய நினைவை அடைந்தார்கள்.
”நன்றாகப் பாடுகிறாளே! இந்தக் குழந்தைக்குக் கல்யாணம் ஆகிவிட்டதா?" என்று மங்களம் ஸ்வர்ணத்தைப் பார்த்துக் கேட்டாள். ஸ்வர்ணம் சிறிது நேரம் ஒன்றும் தோன்றாமல் பதில் எதுவும் கூறாமல் உட்கார்ந்திருந்தாள். பிறகு, கண்ணீர் திரையிட, "இல்லை. அவளுக்குத்தான் பகவான் ஒரு தீராத குறையைக் கொடுத்துவிட்டானே!" என்றாள் ஸ்வர்ணாம்பாள்.
ஸரஸ்வதிக்கு ஏதோ குறை என்று கூறியதும், அங்கிருந்தவர்களுக்கு அது என்ன வென்று அறிய ஆவல் ஏற்பட்டது. அவர்கள் அதை எப்படிக் கேட்டது என்று யோசித்துக் கொண்டிருக்கும்போதே அவர்கள் கேளாமலேயே ஸ்வர்ணாம்பாள் ஸரஸ்வதியின் கால் ஊனத்தைப்பற்றி மங்களத்திடம் கூறினாள். மேலும் அவள். "அவள்” அத்தானுக்கு அவளைக் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்கிற அபிப்பிராயம் இருந்தது. தாயில்லாததால், குழந்தையிலிருந்தே நானும் அவளை வளர்த்து விட்டேன். அவளுக்குத்தான் கல்யாணம் செய்து கொள்ளவே இஷ்டமில்லையாம். 'முதலில் எல்லோரும் சம்மதப்பட்டுச் செய்து கொண்டு விடுவீர்கள் அத்தை. காலப்போக்கில் உங்கள் மனமெல்லாம் எப்படி எப்படியோ மாறிவிடும்' என்று கூறுகிறாள்.
"அத்தானுக்குப் பாட்டுப் பிடிக்கிறது என்று என்னைக் கல்யாணம் பண்ணிக் கொள்கிறான் என்று வைத்துக்கொள் அத்தை. கொஞ்ச நாளைக்குள் அதுவும் அலுத்துவிடும். 'போயும் வந்தும் இந்த நொண்டியைத் தானா என் தலையில் கட்டிக்கொண்டு அழவேண்டும்!' என்று அவன் மனம் சலித்துப்போகும். வேண்டாம், அத்தை' என்று வேதாந்தம் பேசுகிறாள் ஸரஸ்வதி" என்று ஸ்வர்ணாம்பாள் மங்களத்திடம் கூறினாள்.
ஸரஸ்வதி லஜ்ஜையுடன் முகத்தைக் கவிழ்த்துக்கொண்டு, "என்ன அத்தை இது? போகிற இடத்திலெல்லாம் என் ராமாயணம் பெரிசாக இருக்கிறதே” என்று கேட்டாள்,
"ராமாயணம் என்ன? வயசு வந்த பெண்ணைக் கல்யாணம் செய்து கொடுக்காமல் வைத்திருந்தால், காரணம் என்ன என்று தெரிந்து கொள்ள நினைப்பது எல்லோருக்கும் சசஜந்தானே?" என்றாள் ஸ்வர்ணாம்பாள்.
பெண் வீட்டாருக்குப் பிள்ளையைப் பிடித்துவிட்டது. பிள்ளை வீட்டாரின் அபிப்பிராயமும்