(Reading time: 8 - 16 minutes)
Irulum oliyum
Irulum oliyum

அடங்கிவிட்டார்கள்.

ராஜமையர் வெற்றிலைக்குச் சுண்ணாம்பைத் தடவியபடி சமையற்கட்டில் வந்து மங்களத்தின் எதிரில் உட்கார்ந்து கொண்டார். சிறிது பொறுத்து, ”வர வர உனக்கு என்னைக் கவனிக்கவே அவகாசம் இல்லாமல் போய்விட்டது மங்களம்! சாப்பிட்டு கை அலம்புகிறதற்கு முன்னாடியே தயாராக வெற்றிலை மடித்து வைத்துக்கொண்டு காமரா அறையில் வந்து நிற்பாயே. இப்பொழுது என்னடாவென்றால் பாக்கு, வெற்றிலை, சுண்ணாம்பு மூன்றையும் தேடி நானே எடுத்துப் போட்டுக்கொண்டு உனக்கும் தட்டில் வைத்துக்கொண்டு வந்து கொடுக்க வேண்டியிருக்கிறது" என்று பாதி நிஷ்டுரமாகவும் பாதி கேலியாகவும் கூறினார்.

மங்களமும் பொய்க்கோபத்துடன் அவரைப் பார்த்து, "நாளைக்கே மாப்பிள்ளை வரப்போகிறான். பிறகு நாட்டுப் பெண் வருவாள். இன்னும் உங்களுக்கு நான் நடுங்க வேண்டாமா? நடுங்கிச் செத்ததெல்லாம் போதாதா?" என்று கேட்டாள்.

"பார்த்தாயா மங்களம், அப்பொழுதே சொல்லவேண்டும் என்று இருந்தேன். குழந்தைகள் ஒருத்தருக்கு ஒருத்தர் ஏகப் பட்டதாகத் தர்க்கம் பண்ணிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் எதிரில் பேசவேண்டாம் என்று பேசாமல் இருந்து விட்டேன். பிள்ளைக்கும், அவனைச் சேர்ந்தவர்களுக்கும் சாவித்திரியை மிகவும் பிடித்து விட்டதாம். என் பெண்ணின் சம்மதத்தைக் கேட்டுவிடு" என்றார் ராஜமையர்.

மங்களத்துக்கு இப்பொழுது நிஜமாகவே கோபம் வந்தது. "சின்ன வயசிலிருந்தே செல்லம் கொடுத்து வளர்த்துவிட்டீர்கள் உங்கள் பெண்ணை! நான் என்ன கேட்கிறது அவளை? அவள் ஏதாவது என்னை மதித்துப் பதில் சொல்லுவாளா? நீங்களே கேளுங்கள். முதலில் அவளுக்குப் பிடித்தாகவேண்டும். அப்புறம் உங்கள் அம்மாவுக்குப் பிடிக்கவேண்டும் ….”

மங்களம் இந்த வார்த்தைகளை உரக்கவே சொன்னாள். பாட்டியோ பலகாரமெல்லாம் முடிந்து கூடத்தில் ஊஞ்சலில் படுத்து அரைத்தூக்கத்தில் ஆழ்ந்திருந்தாள். ஆகவே மாமியாரைப்பற்றி இரண்டொரு வார்த்தைகள் நிஷ்டுரமாகப் பேச முடிந்தது.

""நம் காலத்தைப்போல் இல்லையே. பெண் பார்ப்பதற்குப் பிள்ளை வீட்டார் போவார்களே தவிர, பிள்ளையை அவ்வளவாக அழைத்துப்போகும் வழக்கம் இருந்ததில்லை. பெரியவர்கள் பார்த்துச் செய்துவைத்த கல்யாணங்களில் நூற்றில் தொண்ணூறு அழகாகவே அமைந்தன. பிள்ளைக்குப் பதினைந்து வயசும் பெண்ணுக்கு ஒன்பது வயசும் என்று பார்த்துச்செய்த கல்யாணங்களில் எழுபது வயசுவரையில் தம்பதிகள் அன்யோன்யமாக வாழ்ந்திருக்கிறார்கள். இந்தக் காலத்தில் மனசுக்குப் பிடித்திருக்கிறதா என்று ஆயிரம் தடவை பெண், பிள்ளை சம்மதத்தைக் கேட்டு நடத்தும் கல்யாணம் நூற்றுக்குத் தொண்ணூறில் 'நான், நீ' என்ற சச்சரவுடன் வாழ்க்கை நடத்துகிறார்கள்" என்று ராஜமையர் கூறினார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.