Flexi Classics தொடர்கதை - இருளும் ஒளியும் - 05 - ஸரோஜா ராமமூர்த்தி
இருளும் ஒளியும் : 5. டில்லியிலிருந்து
கல்யாணத்திற்காக ராஜமையர் விசேஷ ஏற்பாடுகள் எல்லாம் செய்திருந்தார். வீட்டைச்சுற்றி பெரிய கொட்டாரப் பந்தல் போட்டிருந்தது. விருந்தினர்கள் தங்குவதற்காகவும் சம்பந்தி வீட்டார் தங்குவதற்காகவும் இரண்டு வீடுகள் வேறு வாடகைக்கு அமர்த்தினார். அந்த ஜில்லாவிலேயே கைதேர்ந்த சமையற்காரர்களை ஏற்பாடு செய்தார். சீர் வரிசைகளும், மற்ற ஏற்பாடுகளும் விமரிசையாகவே இருந்தன. 'இன்னொரு பெண் இருக்கிறாளே; கொஞ்சம் நிதானமாகத்தான் செலவு செய்யுங்களேன்" என்று மங்களம் அடிக்கடி அவரிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்.
பிரபலமான நாதஸ்வர வித்வானை வரவழைக்க அவர் ஏற்பாடு செய்திருந்தார். மாப்பிள்ளை ரகுபதிக்குச் சங்கீதம் என்றால் பிடித்தம் அதிகம் என்று சந்துரு அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தான். 'பாட்டுக் கச்சேரிக்கு நல்ல பாடகராக யாரையாவது அமர்த்தலாம்' என்று ராஜமையர் கூறியபோது, சந்துரு அவரைத் தடுத்துவிட்டான். எங்கே ஸரஸ்வதியின் வீணாகானத்தையும், தேனைப்போல் இனிக்கும் அவள் குரல் இனிமையையும் கேட்க முடியாமல் போய்விடுமோ என்கிற கவலை தான் காரணமாக இருக்கவேண்டும். ”அந்தப் பெண்தான் கொள்ளைப் பாட்டு பாடுகிறாளே" என்று மங்களம் வேறு கூறினாள்.
புடைவைகள் வாங்கும் பொறுப்பைச் சாவித்திரியின் இஷ்டப் படி விட்டுவிட்டார்கள். "நம் ஜவுளி தினுசுகளே அறுநூறு ரூபாய்க்குமேல் போய்விட்டதே. இன்னும் மாப்பிள்ளைக்கு எடுக்கும் ஜவுளிகளையும் நீங்களே வாங்குவதாக ஒப்புக் கொண்டிருக்கிறீர்களாமே" என்று கவலையுடன் மங்களம் ஜவுளிக்கடைப் பட்டியலைப் பார்த்துக் கேட்டாள்.
”த்ஸு! பிரமாதம்... முதல் முதலில் குழந்தைக்குக் கல்யாணம் செய்கிறோம். விட்டுத் தள்ளு இதையெல்லாம். செலவைப் பார்த்தால் முடியுமா?" என்று ஒரே வார்த்தையில் பதில் கூறி முடித்துவிட்டார் ராஜமையர்.
கணவன் வார்த்தையைத் தடுத்துப் பேசி அறியாத மங்களம் பதில் எதுவும் கூறாமல் பட்சணங்களுக்குச் சாமான் ஜாதா மனத்துக்குள் தயாரித்துக்கொண்டிருந்த போது வாசற் கதவை திறந்து கொண்டு தந்திச் சேவகன் உள்ளே வந்து தந்தி ஒன்றை ராமையரிடம் கொடுத்துவிட்டுச் சென்றான்.
தந்தியைப் பிரித்துப் பார்த்தவுடன் அவர் முகம் சந்தோஷத்தால் மலர்ந்தது. சில வருஷங்களாகப் பார்க்காதிருந்த அவர் சகோதரி பாலமும், அவள் குழந்தையும் வருவதாகச் செய்தி எத்திருந்தது.
"பாலம், நாளைக் காலை வண்டிக்கு வருகிறாளாம். மாப்பிள்ளை ராமசேஷு தந்தி கொடுத்திருக்கிறார். நாத்தனாரும், மதனியும் வருஷக் கணக்கில் சேர்த்து வைத்திருக்கும்