Flexi Classics தொடர்கதை - இருளும் ஒளியும் - 06 - ஸரோஜா ராமமூர்த்தி
இருளும் ஒளியும் : 6. வீணாகானம்
சாவித்திரி -ரகுபதி விவாகம் 'ஜாம், ஜாம்' என்று நடந்தேறியது. பணத்தைப் 'பணம்' என்று பாராமல் செலவழித்தார் ராஜமையர். சந்துருவுக்கும். சீதாவுக்கும் இருந்த உற்சாகத்தில் ஊரையே அழைத்துவிட்டார்கள். வந்தவா, போனவர்களுக்கு ஒரு குறைவும் இல்லாமல், ஓடி ஆடி எல்லாவற்றையும் கவனித்து வந்தாள் மங்களம். சம்பந்தி வர்க்கத்திலும், 'நொட்டைச் சொல்' சொல்ல யாரும் இல்லை. ஸ்வர்ணமும், ஸரஸ்வதியும் இன்ப வெள்ளத்தில் மிதந்து திளைத்தனர். அவ்வளவு தடபுடலாகக் கல்யாணம் நடைபெறுவதில் அவர்களுக்குப் பரமதிருப்தி.
அன்று சித்திரை மாதத்துப் பௌர்ணமி. பால் போன்ற நிலவொளியில் அந்த ஊரும் அதன் சுற்றுப்புறங்களும் மூழ்கிக் கிடந்தது. அந்த ஊரில் பல இடங்களில் கல்யாணம். நாதஸ்வரத்தின் இன்னிசையும் நிலவின் குளுமையும், 'கம்'மென்று காதவழிக்கு வாசனை வீசும் மல்லிகை மலர்களுமாகச் சேர்ந்து ஸ்வர்க்கத்தில் இவ்வளவு இன்பம் உண்டா என்கிற சந்தேகத்தை எழுப்பின. ராஜமையர் பூந்தோட்டத்திலிருந்து குண்டு மல்லிகையாகவே கல்யாணத்திற்கு வரவழைத்திருந்தார். கரு நாகம்போல் வளைந்து துவளும் பெண்களின் ஜடைகளின் மீது வெள்ளை வெளேர் என்று மணம் வீசும் மல்லிகையின் அகு பார்ப்பதற்கு ரம்மியமாக இருந்தது. முகூர்த்தத்தன்று இரவு விருந்துக்கு அப்புறம், கொட்டாரப் பந்தலில் ஊஞ்சலில் பெண்ணையும், பிள்ளையையும் உட்கார வைத்தார்கள். ஊஞ்சல் வேடிக்கையை ரசிப்பதற்கு ஆண்களை விடப் பெண்களின் கூட்டமே வழக்கம்போல் அதிகமாக இருந்தது.
" என்னடி இது? ஊஞ்சலில் அவர்களை உட்கார்த்திவைத்து விட்டு எல்லோரும் பேசாமல் இருக்கிறீர்கள்? நறுக்கென்று நாலு பாட்டுகள் பாடமாட்டீர்களோ" என்று கூறிவிட்டு 'கன்னூஞ்சல் ஆடினாரே, மீனாட்சி சுந்தரேஸ்வரர்' என்று இரண்டு கட்டை ஸ்ருதியில் பாட ஆரம்பித்தாள் பெரிய சுமங்கலியாகிய ஒரு அம்மாள்.
யுவதிகள் கூட்டத்திலிருந்து கலீர் என்று சிரிப்பொலி எழுந்தது. பொங்கிவந்த சிரிப்பை வெகு சிரமப்பட்டுச் சீதா அடக்கிக்கொண்டு. "ஸரஸு! பாட்டுத் தெரிந்தும் பாடாமல் இருப்பவர்களுக்கு இதுதான் சரியான தண்டனை! புரிந்ததா உனக்கு?" என்று கேட்டாள். ஊஞ்சல் பாட்டை அரைகுறை பாக நிறுத்திவிட்டு மறுபடியும் அந்த அம்மாள், 'லாலி --லாலய்ய லாலி' என்று ஆரம்பிக்கவே, கொஞ்சம் தள்ளி உட்கார்ந்திருந்த ராஜமையர் சுவாதீனமாக அவளைப் பார்த்து, "அம்மாமி! வருகிற மாசந்தானே மாமாவுக்குச் சஷ்டியப்த பூர்த்தி? ஜமாய்த்துத் தள்ளிவிடுவாய்போல் இருக்கிறதே!" என்று கேலி செய்தார்.
"போடா அப்பா! சிறுசுகள் எல்லாம் பாடாமல் உட்கார்ந்திருந்தால் கிழவிதானே பாடவேண்டும்?" என்று கூறி அந்தப் பாட்டையும் அரைகுறையாகவே நிறுத்தி விட்டாள், அந்த அம்மாள்.
இதற்குள்ளாகச் சந்துருவின் கண்கள் ஆயிரம் முறை ஸரஸ்வதியின் பக்கம் பார்த்து, 'உன்