Flexi Classics தொடர்கதை - இருளும் ஒளியும் - 09 - ஸரோஜா ராமமூர்த்தி
இருளும் ஒளியும் : 9. மனித சுபாவம்
கன்னங்களில் வழிந்த கண்ணீரைத்தான் ரகுபதியின் கரங்கள் துடைத்தன. சாவித்திரியின் மனதில் ஏற்பட்டிருக்கும் குறையை - சந்தேகத்தை - பொறாமையை அவனால் துடைக்க முடியவில்லை 'மனிதன், அல்ப சந்தோஷி' என்று பெரியவர்கள் கூறுகிறார்கள். கல்யாணம் முடிந்தவுடன் மனைவியின் விருப்பப் படி கணவன் நடப்பதோ, கணவனின் விருப்பப்படி மனைவி நடப்பதோ இயலாத காரியம். வெவ்வேறு குடும்பத்திலிருந்து தெய்வ ஆக்ஞையால் சேர்க்கப்பட்ட இருவரின் உள்ளங்களும் ஒன்றுபடச் சில வருஷங்களாவது அவகாசம் வேண்டி இருக்கும். சாவித்திரி அந்த வீட்டுக்கு வந்ததும் அங்கு ஸரஸ்வதிக்கு அளித்திருக்கும் உரிமையைக் கண்டு ஆச்சரியப்பட்டாள். பீரோவிலிருந்து அத்தானுடைய கைச் செலவுக்குப் பணங்கூட அவள்தான் எடுத்துக் கொத்தாள். வரவு-செலவைக் கணக்கெழுதி வைத்தாள். ஸரஸ்வதிக்கு என்று சங்கீத சபைகளில் ஒன்றுக்குப் பத்தாகப் பணம் செலவழித்துக் கச்சேரிகளுக்கு ரகுபதி டிக்கெட்டுகள் வாங்கினான்.
தன் கணவன் இப்படிச் செலவழிப்பதை சாவித்திரி ஒரு குற்றமாக எடுத்துக் கொண்டாள். என்ன தான் தகப்பனார் மாதந்தோறும் ஸரஸ்வதிக்காகப் பணம் அனுப்பினாலும், பணத்தில் ’என்னுடையது உன்னுடையது' என்று எங்கே வித்தியாசம் தெரிகிறது? ரகுபதி வெளியே சென்று விட்டு வீடு திரும்பும்போது சாவித்திரி கணவன் மீது ஏற்பட்ட கோபத்தால் அவன் வந்ததைக்கூட லட்சியம் செய்யாமல் தன் அறையில் கதவைச் சார்த்திக்கொண்டு உட்கார்ந்திருப்பாள். வேலை செய்து களைத்துப்போய் ஸ்வர்ணம் படுத்துத் தூங்கிவிடுவாள். அப்பொழுதெல்லாம் ஸரஸ்வதி அத்தானுக்குப் பரிந்து உபசரித்துக் காபி கொடுத்து, உணவு பரிமாறி, கவனித்துக் கொள்வாள். ”அவள் ஏன் அதைச் செய்யவேண்டும்? அவனுடையவள் என்று உரிமை பாராட்ட ஒருத்தி இருக்கும்போது ஸரஸ்வதிக்கும், இன்னொருத்திக்கும் அந்த இடத்தில் என்ன வேலை இருக்கிறது? 'எனக்குச் சாதம் போட வா' என்று கணவன் வந்து தன்னைக் கூப்பிடட்டுமே! தன்னைக் காணாவிடில், ’ஸரஸு" என்று அவளைக் கூப்பிட அவனுக்கு என்ன உரிமை இருக்கிறது?' என்று சாவித்திரி எண்ணி எண்ணி மனம் வெதும்பினாள்.
குழந்தை மனம் படைத்த ஸரஸ்வதிக்குச் சாவித்திரியின் போக்கு புரியவில்லை. ஒரு வேளை கணவன், மனைவிக்குள் ஏதாவது ஊடலாக இருக்கும். நாம் ஏன் இதில் தலையிடவேண்டும்?' என்று அவள் என்றும் போல் பழகி வந்தாள்.
நீல வர்ணப் பட்டுப் புடைவை உடுத்தி, இளம் பச்சை ரவிக்கை அணிந்து சாவித்திரி அழகாகத் தோன்றினாள் ரகுபதிக்கு. சிரித்துப் பேசும் சமயத்தில் கண்ணீரும், சண்டையும் அவனுக்குப்