பிடிக்கவில்லை. கீழே தூக்கம் வராமையால் ஸரஸ்வதி வீணையில் 'ஸஹானா' ராகத்தை வாசித்துக் கொண்டிருந்தாள்: சங்கீதத்துக்கே குழந்தையிலிருந்து பெரியவர்கள் வரையில் யாவரையும் 'மயக்கும் சக்தி’ உண்டு. சாவித்திரி வீணாகானத்தில் தன்னை மறந்து சிறிது நேரம் கணவனின் மார்பில் சாய்ந்திருந்தாள். ரகுபதி அவளை அன்புடன் பார்த்து, "சாவித்திரி! அப்பா, அம்மாவை நினைத்துக்கொண்டு விட்டாயா? ஊருக்குப் போக வேண்டும் என்று ஆசை வந்து விட்டதாக்கும்!" என்று கொஞ்சினான்.
"அதெல்லாம் ஒன்றும் இல்லை." - முகம் சிவக்கக் கண்களை மூடிக் கொண்டாள் அவள்.
கீழே 'ஸஹானா' ராகத்தை முடித்துவிட்டாள் ஸரஸ்வதி. அடுத்த பாட்டு சந்தர்ப்பத்துக்கு ஏற்றவாறு அமைந்தது. ’தூண்டிற் புழுவினைப்போல்' வீணையில் ஒலிக்க ஆரம்பித்ததும், ரகுபதி, “இதோ பார்த்தாயா? இந்த வீணையின் நாதத்துக்கு இந்த உலகத்தையே காணிக்கையாக வைத்து விடலாம். அதன் தந்திகளை மீட்டும்போது எழும் ஓசைக்கு ஈடு வேறு எதையும் சொல்ல முடியாது. சாவித்திரி! ஸரஸுவிடம் நீ பாட்டுக் கற்றுக் கொள்ளலாமே. முன்பு ஒரு தடவை கேட்டாயே, 'உங்களுக்கு என்ன பிடிக்கும்!' என்று. எனக்குப் பிடித்தது இது ஒன்றுதான். என் மனைவி என் எதிரில் உட்கார்ந்து ஆனந்தமாகப் பாட வேண்டும். காலம் நேரம் போவது தெரியாமல் நான் அதை அனுபவிக்க வேண்டும்."-ரகுபதி உணர்ச்சி யுடன் பேசினான்.
மகுடி ஊதுவதைத் திடீரென்று நிறுத்தியதும் சீறும் சர்ப்பம் போல் சாவித்திரி 'விசுக்'கென்று அவன் மடியிலிருந்து எழுந்தாள்.
"எனக்கு எல்லாம் தெரியும். கல்யாணத்தின் போதே எனக்குத் தெரியுமே! மணிக் கணக்கில் ஸரஸ்வதியைப் பாடச் சொல்லிவிட்டு நேரம் போவது தெரியாமல் உட்கார்ந்திருந்தீர்களே! மறந்து போய்விட்டேன் என்றா பார்த்தீர்கள்? மறக்க வில்லை!" என்று கோபமும், பரிகாசமும் தொனிக்கக் கூறிவிட்டு சாவித்திரி அவனிடமிருந்து ஒதுங்கி உட்கார்ந்து கொண்டாள்:
ரகுபதி பொறுமையை இழக்காமல் சாவித்திரியைப் பார்த்து. "என்னவோ சம்பந்தம் இல்லாமல் பேசுகிறாயே! அயலாரிடம் உன்னைப் பாட்டுக் கற்றுக்கொள்ளச் சொல்லவில்லையே! ஸரஸ்வதி நம் வீட்டு மனுஷிதானே?" என்று கேட்டான்.
"உங்கள் - ஸரஸ்வதி எனக்கு ஒன்றும் வாத்தியார் ஆக வேண்டாம். அந்தப் பெருமை எல்லாம் உங்களோடு இருக்கட்டும். எனக்குப் பாட்டும் வேண்டாம் கூத்தும் வேண்டாம். எனக்கு இஷ்டமில்லாத விஷயத்தை வற்புறுத்த வேண்டாம். என் பிறந்த வீட்டிலேயே என்னை யாரும் எதற்கும் வற்புறுத்த மாட்டார்கள். ஆமாம்.." என்று படபடவென்று பேசிவிட்டுப் படுக்கை அறைக்குள் சென்று கட்டிலின் மீது 'பொத்’தென்று: உட்கார்ந்து கொண்டாள்.
வெளியே சென்று வந்த கணவன் சாப்பிட்டானா என்று விசாரிக்கவேண்டும் என்றுகூட அவளுக்குத் தோன்றவில்லை. ரகுபதி சப்பிட்ட மனத்துடன் படுக்கை அறையில் நுழைந்து