அன்று வந்த தினசரி ஒன்றைப் படிப்பதில் முனைந்தான். மேஜைமீது வைக்கப்பட்டிருந்த பால் ஆறிப்போயிருந்தது. சிறிது நேரம் கணவனையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்த சாவித்திரி கீழே ஸரஸ்வதி பாட்டை முடித்ததும் “அப்பாடா! பாதி ராத்திரி வரைக்கும் பாட்டும் கதையும்! தூ . " என்று கூறிக்கொண்டு போர்வையை இழுத்துப் போர்த்திக்கொண்டு படுத்துவிட்டாள். மனைவி தன்னை இவ்வளவு உதாசீனம் செய்வாள் என்று ரகுபதி எதிர்பார்க்கவில்லை. ஆகவே, கோபமும். வெட்கமும் நிறைந்த மனத்துடன் அவள் அறைக்கு வெளியே வராந்தாவில் யோசித்த படி குறுக்கும், நெடுக்குமாக உலாவும்போது கீழே ஸரஸ்வதி மங்கிய விளக்கொளியில் படுக்கையை உதறிப்போட்டுக்கொண்டு படுப்பது தெரிந்தது. சிறிது நேரத்துக்-கெல்லாம் அவள் அயர்ந்து தூங்கிவிட்டாள். சலனம் இல்லாத அவள் முகத்தில் புன்னகை மிளிர்ந்து கொண்டிருந்தது.
ரகுபதி மகத்தான தவறு செய்துவிட்டான். கை எதிரில் இருந்த கனியை அருந்தாமல், காயைக் கனிய வைக்கும் விஷயத்தை அவன் மேற்கொண்டால் அது எளிதில் நடந்துவிடுகிற காரியமா? ரகுபதி சிலைபோல் நின்று அவளையே கண் இமைக்காமல் பார்த்தான். பிறகு, சாம்பிய மனத்துடன் அவன் அறைக்குத் திரும்பியபோது சாவித்திரி. 'புஸ்' ஸென்று பெருமூச்சு விட்டுக் கொண்டே அனல் தெறிக்கும் விழிகளால் அவனைப் பார்த்தாள். அவளைக் கவனியாதவன் போல் ரகுபதி அறைக்குள் வந்து கதவைத் தாழிட்டுக்கொண்டு படுக்கையில் படுத்தான். கணவன், மனைவிக்கு இடையே சாண் அகலம் இடைவெளி இருந்தாலும், சாவித்திரியும், அவனும் எங்கோ ஒருவருக்கொருவர் தொலைவில் இருப்பதாகவே நினைத்தார்கள்.
'நாம் சொல்வதைத்தான் இவள் கேட்டால் என்ன?' என்று அவன் பொருமிக்கொண்டே படுத்திருந்தான்.
'போயும், போயும், அவளிடந்தான் பாட்டுக் கற்றுக் கொள்ள வேண்டும்! பாடு என்றால் பாடவேண்டும். ஆடு என்றால் ஆட வேண்டும்! ஓடு என்றால் ஓட வேண்டும்! வா என்றால் வர வேண்டும்! இந்தப் புருஷர்களுடைய அதிகாரத்துக்கு அளவில்லையா என்ன? ஸ்திரீகளைச் சமமாகப் பாவிக்கிறார்களாம்! பேச்சிலே தான் எல்லாம் அடிபடுகிறது. வீட்டிலே அவனவன் மனைவியை இன்னும் அடிமையாகத்தான் வைத்திருக்கிறான்.'-- சாவித்திரி பெருமூச்சு விட்டுக்கொண்டு இவ்விதம் நினைத்தாள்.
' நான் சொல்லுவதை இவள் ' உத்தரவாக' ஏன் எடுத்துக் கொள்ளவேண்டும்? கணவனின் அன்புக் கட்டளை என்று கொள்ளக்கூடாதா? வீட்டிலே பாட்டியும், பெற்றோர்களும் இடங்கொடுத்துத் தலைமேல் ஏற்றிக்கொண்டிருக்கிறார்கள். வந்த இடத்திலும் பணியும் சுபாவம் ஏற்படவில்லை. ஆகட்டும்.... பார்க்கலாம்' என்று தீர்மானித்துக்கொண்டு ரகுபதி தூங்க ஆரம்பித்தான்.
நிம்மதியாகத் தூங்கும் ஸரஸ்வதி ஒரு கனவு கண்டு சிரித்துக் கொண்டிருந்தாள். அழகிய மலர்