மாலை ஒன்றைக் கையில் எந்திச் சந்துரு அன்புடன் அவளை நெருங்கி வருவதை உணர்ந்து ஸரஸ்வதி சிரித்துக் கொண்டே அவனிடமிருந்து விலகிப் போகிறாள்.
"ஸரஸ்வதி! உன்னிடம் ஒரு குறையும் இல்லை. அற்ப விஷயம் அது. நான் அதைப் பாராட்டுகிறவன் அல்ல, ஸரஸ்வதி" என்று சந்துரு உண்மை ஜ்வலிக்கும் பார்வையுடன் அவளிடம் கூறுகிறான்:
ஸரஸ்வதி திடுக்கிட்டு விழித்துக்கொண்டாள். சாவித்திரியைப் புக்ககத்துக்கு அழைத்து வந்த போது சந்துரு அவளைத் தனிமையில் சந்தித்துப் பேச எவ்வளவோ சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக்கொண்டாலும் ஸரஸ்வதி அதற்கு இடங்கொடாமல் உறுதியுடன் இருந்தாள்.
"சீதா உன்னை எங்களுடன் அழைத்து வரச் சொன்னாள்" என்று மங்களம் கூப்பிட்டபோது, "ஆகட்டும் மாமி, வரு கிறேன். சீதாவைத்தான் இங்கே அனுப்பி வையுங்களேன்" என்று சிரித்துக்கொண்டே கூறினாள் ஸரஸ்வதி.
இது என்ன கனவு? கனவில் காண்பதெல்லாம் வாழ்க்கையில் உண்மையாக நடக்குமா? நடந்தாலும் நடக்கலாம். நடக்காமல் போனாலும் போகலாம்; அவள் படுக்கை அறைக்கு எதிரில் பூஜை அறை இருந்தது. அன்று அறைக்கதவு சார்த்தப் படாமலேயே திறந்திருந்தது. உள்ளே பூஜையில் மாட்டியிருந்த நடராஜனின் உருவப்படம் லேசாகத் தெரிந்தது. 'காலைத் தூக்கி நின்றாடும் தெய்வ’த்தின் கலை அழகைக்கண்டு ரசித்தாள் ஸரஸ்வதி. உன்னதமான கலையைத் தனக்கு அருளி இருக்கும் ’அவன்’ தன்னைக் கேவலம் இந்த உலக இன்பங்களில் சிக்க வைக்கமாட்டான் என்கிற உறுதியும் கூடவே ஸரஸ்வதியின் மனதில் உதித்தது. இருந்தாலும் திடீர் திடீர் என்று சந்துருவின் நினைவு அவளுக்கு ஏன் தோன்றவேண்டும்? மனித சுபாவம் அப்படித்தான் என்று புரிந்து கொள்ளவில்லை ஸரஸ்வதி.
---------
தொடரும்