Flexi Classics தொடர்கதை - இருளும் ஒளியும் - 10 - ஸரோஜா ராமமூர்த்தி
இருளும் ஒளியும் : 10. 'வானம்பாடி'
அந்த இரவுக்கு அப்புறம் கணவனும் மனைவியும் பல முறைகள் தனிமையில் சந்தித்திருக்கிறார்கள். ஆனால், மனம் விட்டுப் பேசவோ, அளவளாவவோ அவர்களுக்கு முடியவில்லை. கணவனுக்கு உணவு பரிமாறும் போது சாவித்திரி அவன் முகத்தைப் பார்க்காமல் யாரோ அன்னியனுக்குப் படைப்பது போல் கலத்தில் பரிமாறிவிட்டு முகத்தைத் திருப்பிக்கொண்டு வெளியே சென்று விடுவாள். அவன் அவளை நிமிர்ந்து பாராமல் உண்டு விட்டுப் போய்விடுவான். ஒரு தினம் தலை வாரிக்கொள்ள சாவித்திரியை அழைத்து சீப்புக் கேட்டபோது அவன் எதிரில் மேஜை மீது 'பட்' டென்று சீப்பு வந்து விழுந்தது! 'இந்தத் துணிகளை இன்று சோப்புப் போட்டுத் துவைக்க வேண்டும்' என்று அவன் தயங்கிக் கொண்டே யாரோ மூன்றாவது மனிதரிடம் சொல்லுவது போல் கூறிவிட்டு வெளியே போவான். மாலை வீடு திரும்பும் போது ஒவ்வொரு தினம் அவை துவைத்து அழகாக மடித்து வைக்கப்பட்டு இருக்கும். பல நாட்கள் அவை அவன் அறையில் ஒரு மூலையில் கேட்பாரற்றும் கிடப்பது உண்டு.
"அத்தான்! மாடியில் உன் அறைப்பக்கம் போனேன்: துவைப்பதற்குத் துணி இருக்கவே துவைத்து மடித்து வைத்தேனே பார்த்தாயோ?" என்று ஸரஸ்வதி அவனைக் கேட்ட பிறகுதான் அவைகளைத் துவைத்தது யார் என்பதும் அவனுக்குப் புரியும்.
படுக்கை அறையில் மேஜைமீது வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலை மீது தூசு படிந்து கிடக்கும். படங்களில் மலர் மாலைகள் வாடிக் கருகித் தொங்குவதைக் கவனிப்பதற்கு யாரும் இல்லை. பெரியவர்கள், 'ஆணுக்குப் பெண் துணை' என்றும் ' பெண்ணுக்கு ஆண் துணை' என்றும் ஏன் ஏற்படுத்தியிருக்கிறார்கள்? உடல் இன்பத்திற்காக என்றால் புனிதமான தாம்பத்ய உறவு அவசியம் இல்லை. ஆயிரம் மைல்களுக்கு அப்பால் உத்தியோக நிமித்தம் சென்றிருக்கும் கணவனின் சுக வாழ்வுக்காக மனைவி ஊரில் அவனையே நினைத்துத் தவங்கிடந்து நோன்புகள் செய்வானேன்?
தாம்பத்ய உறவில் உள்ளம் இரண்டும் ஒன்று சேர்ந்து உறவாடுவதுதான் இன்பம். சாவித்திரி தினம் இரவு நேரத்தில் பால் டம்ளருடன் படுக்கை அறைக்குள் நுழைவாள். 'நக்' கென்று அதை மேஜை மீது வைத்துவிட்டுப் படுக்கையில் ' பொத்' தென்று சாய்ந்து போர்வையை இழுத்து மூடிக்கொண்டு படுத்து விடுவாள்.
ரகுபதி ஒரு சங்கீதப் பித்தன். இரவில் நகரத்தில் சங்கிதக் கச்சேரி கேட்டுவிட்டு வீடு திரும்பும்போது பொழுதாகிவிடும். வீடு திரும்பும் கணவனை மலர்ந்த முகத்துடன் சாவித்திரி வரவேற்க மாட்டாள். கூடத்தில் அயர்ந்து தூங்கிக்கொண்டிருக்கும் ஸ்வர்ணத்தை