எழுப்புவதற்கு ரகுபதிக்கு மனம் வராது. ஸரஸ்வதியைக் கூப்பிட இனி, அவள் யார்? அவன் யார்? தளர்ந்த மனத்துடன் ரகுபதி, மாடிக்குப் போய்ச் சாவித்திரியை அழைக்கவேண்டும் என்கிற எண்ணத்துடன் படி களில் ஏறும்போது தடதடவென்று சாவித்திரி மாடிப் படிகளில் இறங்கி வேகமாக அவனைத் தாண்டிச் செல்வாள். அப்ப! ஒரு ஸ்திரீக்கு அகங்காரமும், கோபமும் ஏற்படும் போது உண்டாகும் வேகம் ஓர் அணு குண்டுக்குக்கூட இருக்காது என்று சொல்லலாம்! அடுத்தாற்போல சமையலறைக் கதவைப் 'பட்' டென்று திறந்து சாப்பிடும் தட்டை 'நக்' கென்ற ஓசையுடன் வைத்து விட்டு உறுமும் பெண் புலியைப்போல் காத்து நிற்பாள் சாவித்திரி. 'உங்களுக்குச் சாதம் போடும் வேலை ஒரு கடன்' என்று சொல்லுகிற மாதிரி இருக்கும் அவள் செய்கைகள் எல்லாம்! குமுறும் எண்ணங்களை வார்த்தைகளில் கொட்டித் தீர்த்துவிட்டாலும் பரவாயில்லையே! எண்ணங்கள் மனத்துள் குமுறக் குமுற, எழப்போகும் அனல் விபரீதமாக அன்றோ இருக்கும்? குமுறும் எரிமலையை எவ்வளவு காலந்தான் அடக்கி வைக்க முடியும்?
ரகுபதி சாப்பிட்டு முடித்தவுடன் குடிப்பதற்கு ஜலம் தேவை யென்று டம்ளரைச் சற்று நகர்த்தி வைப்பான். அதை கவனியாதவள் போல் சாவித்திரி 'விர்' ரென்று மாடிப் படிகளில் ஏறி அறைக்குள் சென்றுவிடுவாள். வேதனையும், கோபமும் நிறைந்த மனத்துடன் ரகுபதி அறைக்குள் சென்று ஏதாவது புஸ்தகத்தை எடுத்து வைத்துக்-கொண்டு படிக்க ஆரம்பித்துவிடுவான்.
இப்படியே பேலும் இரண்டு மாதங்கள் சென்றன. இல்வாழ்க்கை ஆரம்பமானவுடன் பாலில் சொட்டுப் புளி விழுந்ததுபோல் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே எழுந்த மனஸ்தாபம் சிறிது சிறிதாக நாளடைவில் வளர்ந்துவிட்டது. கணவனுக்காகப் பிடிவாத குணமுடைய சாவித்திரி தன் போக்கை மாற்றிக்கொள்ளவும் தயாராக இல்லை. மனைவியைத் தன் கொள்கைக்கு இணங்கி வரும்படி வற்புறுத்த வேண்டாம் என்கிற பிடிவாதத்தையும் ரகுபதி தளர்த்தவில்லை.
இவர்கள் இருவருடைய மனஸ்தாபத்துக்கும் இடையில் சரஸ்வதி மிகவும் குழப்பம் அடைந்திருந்தாள். வலுவில் அவளாகவே சென்று சாவித்திரியுடன் பேசினாலும் முகத்தைத் திருப்பிக்கொண்டு சாவித்திரி போய்விடுவாள். ஒரு தவறும் செய்யாத தன்னிடம் சாவித்திரிக்கு என்ன கோபம் ஏற்பட்டிருக்கும் என்பது ஸரஸ்வதிக்குப் பல நாட்கள் வரையில் புரியவே இல்லை.
நாளாக நாளாக, சாவித்திரியின் கோபம் தன்மீது மட்டும் ஏற்பட்டிருக்கவில்லை, அது தன் அத்தான் மீதும் பாயத் தொடங்கி இருக்கிறது என்பதையும் ஓரளவு ஸரஸ்வதி ஊகித்துக் கொண்டாள். 'நிலவு பொழியும் இரவுகளை, இளம் மனைவியைப் படைத்திருக்கும் அத்தான்