ரகுபதி, திறந்த வெளியில் சாய்வு நாற்காலியில் தனியாகக் கழிப்பானேன்?' என்று தன் மனத்தையே கேட்டுப் பார்த்தாள் ஸரஸ்வதி. அவளுக்கு அதற்கும் விடை புரியவில்லை. ஆகவே, ஒரு தினம் ஸரஸ்வதி கூடத்து ஊஞ்சலில் உட்கார்ந்து கீதை படிக்கும் தன் அத்தை ஸ்வர்ணத்தினிடம் சென்று நெருங்கி உட்கார்ந்து கொண்டு, "அத்தை" என்று மெதுவாகக் கூப்பிட்டாள். இதுவரையில் கண்ணனின் உபதேச மொழிகளில் மனதை லயிக்கவிட்டிருந்த ஸ்வர்ணம் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்து. "நீ இங்கேயா அம்மா இருக்கிறாய்? மாடியில் சாவித்திரியுடன் இருப்பதாக அல்லவோ நினைத்துக்கொண்டிருந்தேன்?" என்று வியப்புடன் கூறினாள்.
"சாவித்திரி தூங்குகிறாள் அத்தை. அவளைத் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று தான் இங்கு வந்தேன்" என்றாள் ஸரஸ்வதி. அவள் குரலில் ஏமாற்றமும், ஏக்கமும் நிரம்பி இருந்தன.
ஸ்வர்ணம் மெதுவாகச் சிரித்துக்கொண்டே, 'உனக்கு மத்தியான்ன வேளைகளில் தூக்கமே வராதே. எதையாவது. ”கொடை, கொடை'ன்னு குடைந்துண்டே இருப்பாயே குழந்தையிலிருந்து! ஒரு தரம் உங்கம்மா இருக்கும் போது ...." என்று ஸ்வாதீனமாகப் பழைய கதை ஒன்றை ஆரம்பித்தாள்.
"உஸ். . . . உஸ்" என்று ஸரஸ்வதி வெகு ஸ்வாதீனமாக அத்தையின் வாயைப் பொத்திக் குறும்புத்தனமாகச் சிரித்துக் கொண்டே, "அம்மா இருக்கும் போது நான் செய்த விஷமங்களைக் கேட்டுக் கேட்டுக் காது புளித்துப் போய்விட்டது! அதெல்லாம் பழைய விஷயங்கள்! புது விஷயமாக - ஒன்று சொல்லப்போகிறேன்" என்றாள் ஸரஸ்வதி.
"சொல்லேன்! அதற்கு இவ்வளவு பீடிகை வேண்டுமா என்ன?" என்று கேட்டாள் ஸ்வர்ணம்.
ஸரஸ்வதியின் முகத்தில் சிறிது முன்பு நிலவிய குறும்புச் சிரிப்பும் குறுகுறுப்பும் திடீரென்று மறைந்தன. நிலத்தைக் காலால் கீறிக்கொண்டே தரையைச் சிறிது நேரம் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள். பிறகு நீர் நிறைந்த கண்களுடன், அத்தை ஸ்வர்ணத்தை ஏறிட்டுப் பார்த்து, ”அத்தை! என்னை அப்பாவிடம் அனுப்பிவிடு. நான் அவருடனேயே இனிமேல் இருந்துவிடுகிறேன்" என்றாள், பொங்கி வரும் துயரத்தை அடக்கிக்கொண்டு.
ஸ்வர்ணத்தின் கையில் இருப்பது கீதையானாலும், அவள் இதுவரையில் கண்ணனின் உபதேச மொழிகளில் மனத்தை லயிக்க விட்டிருந்தாலும், அவள் ஒரு சாதாரண அஞ்ஞானம் நிரம்பிய பெண்மணி என்பதை அவள் வேதனை படரும் முகம் தெள்ளெனக் காட்டியது. 'என்னை அப்பாவிடம் அனுப்பிவிடு' என்னும் வார்த்தைகள் அவள் மனத்தில் வேல் போல் பாய்ந்தன. அளவுக்கு மீறிய துயரத்துடன் ஸரஸ்வதியின் முகவாயைத் தன் கையால் பற்றிக்கொண்டு, "ஏன் அம்மா ஸரஸு?" என்று கேட்டாள் ஸ்வர்ணம். கையில் தாங்கி இருக்கும் ஸரஸ்வதியின் முகத்தில் பல வருஷங்களுக்கு முன்பு இறந்துபோன தன் மதனீயின் பரிதாபமான முகம்