Flexi Classics தொடர்கதை - இருளும் ஒளியும் - 12 - ஸரோஜா ராமமூர்த்தி
இருளும் ஒளியும் : 12. ரகுபதியின் கோபம்
மாடிக்குச் செல்லும் மனைவியைச் சற்றும் கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்த ரகுபதி, கோபத்துடன் மனைவியை "சாவித்திரி! சாவித்திரி!" என்று இரைந்து கூப்பிட்டான். ஸரஸ்வதி பயந்து போய் முகம் வெளுக்க ரகுபதியின் முகத்தையே பார்த்துக்கொண்டு நின்றாள். அவன் கூப்பிட்ட தற்கு மாடியிலிருந்து பதில் ஒன்றும் வராமற்போகவே திடுதிடு வென்று மாடிப்படிகளில் ஏறினான் ரகுபதி. அவன் பின்னால் சென்ற ஸரஸ்வதியும், ஸ்வர்ணமும் சாவித்திரியைப் பார்த்து விட்டு ஒருகணம் திகைத்து நின்றார்கள். பிறகு ஸ்வர்ணம் பொங்கி எழும் கோபத்தை அடக்கிக்கொண்டு, "நன்றாக இருக்கிறது சாவித்திரி! வெள்ளிக்கிழமையும் அதுவுமாக!" என்றாள்.
"சாவித்திரி! இதென்னம்மா இப்படி அழுகிறாய்? எழுந்திரு" என்று அவள் கரங்களை அன்புடன் பற்றினாள் ஸரஸ்வதி.
சாவித்திரி கண்ணீர் வழியும் முகத்துடன் கணவனைத் திரும்பிப் பார்த்தாள். பிறகு ஆத்திரம் தொனிக்க, "என் பிறந்த வீட்டில் கூட என்னை யாரும் வற்புறுத்த மாட்டார்கள். இங்கே . ..." என்று மேலும் கூறாமல் தேம்பித் தேம்பி அழுதாள்.
ரகுபதிக்குச் சற்று தணிந்திருந்த கோபம் பீறிட்டு எழுந்தது.
"இங்கே உன்னை வாணலியில் போட்டு வதக்கி, தாலத்தில் எடுத்து வைக்கிறார்கள்! நீ பிறந்த வீட்டில் சுதந்தரமாக வளர்ந்த லக்ஷணம் தான் இப்போது தெரிகிறதே!" என்று கேலியும், ஆத்திரமும் கலந்த குரலில் கூறினான் ரகுபதி.
"என்ன தெரிகிறதாம்?" என்று கணவனைப் பதில் கேள்வி கேட்டு மடக்கிவிட்டதாக நினைத்து, நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டாள் சாவித்திரி.
" உன் லக்ஷணம்! உன் பிடிவாதம்! வேறு என்ன கிடக்கிறது தெரிகிறதற்கு?" என்று ஆவேசத்துடன் கூறிவிட்டுப் பொறுமையை இழந்தவனாக ரகுபதி கீழே உட்கார்ந்திருந்த மனைவியின் கன்னத்தில் பரீரென்று அறைந்தான். அடுத்த விநாடி அவன் தன் தவறை உணர்ந்து கொண்டான். இது வரையில், பெற்ற தாயின் மனம் நோகும்படி ரகுபதி பேசி அறியமாட்டான். உடன் பிறந்தவளைப்போல் அவனுடன் ஒன்றாக வளர்ந்துவரும் ஸரஸ்வதியின் கண்களில் கண்ணீரைக் கண்டால் அவன் நெஞ்சு உருகிவிடும். பெண்களை மலரைப்போல் மென்மையாக நடத்தவேண்டும் என்னும் கொள்கையை உணர்ந்தவன். தன்னுடைய அருமை மனைவியைத் தொட்டு அடிப்பதற்கு மனம் வருமா? கை தீண்டி அடிக்கும்படியான நீச மனோபாவம் தனக்கு
ஏன் ஏற்பட்ட்து என்பதை ரகுபதியால் உணர முடியவில்லை.