அதன்படி நடந்து கொண்டால் நன்றாக இருக்கும். அத்தையும் பரம சாது" என்றாள்.
கணவனின் அடியால் 'விறு விறு' என்று வலிக்கும் தன் கன்னத்தின் எரிச்சலுடன், ஸரஸ்வதியின் அன்பு மொழிகள் அவளுக்கு ஆறுதலைத் தராமல், மேலும் எரிச்சலை மூட்டின.
"எல்லோருடைய குணமுந்தான் தெரிந்து விட்டதே! இனி மேல் தெரிவதற்கு என்ன இருக்கிறது? யார் வேண்டுமானாலும் தங்கமாக இருக்கட்டும், வைரமாக வேண்டுமானாலும் இருக்கட்டும்! 'எனக்கு அதெல்லாம் தெரிய வேண்டிய அவசியம் இல்லை.' 'நான் போகத்தான் வேண்டும்" என்று சாவித்திரி அழுத்தந்திருத்தமாகக் கூறிவிட்டுத் துணிமணிகளை அடுக்கி வைத்துக்கொண்டிருந்தாள். ஸரஸ்வதி முகவாட்டத்துடன் அங்கிருந்து போய்விட்டாள்.
அன்றிரவு படுக்கை அறைக்குள் வந்த - கணவனிடம் வேறெதுவும் பேசாமல், சாவித்திரி, "நாளை காலை வண்டிக்கு என்னை எங்கள் ஊருக்கு ரெயில் ஏற்றிவிடுகிறீர்களா?" என்று கேட்டாள். ரகுபதியின் கோபம் அதற்குள் முற்றிலும் தணிந்துவிட்டது. அவன் புன் சிரிப்புடன் அவள் கைகளாப் பற்றிக்கொண்டு. ”சாவித்திரி! அடித்துவிட்டேன் என்று கோபமா உனக்கு? அடிக்கிற கை, அணைப்பதும் உண்டு என்பதை நீ தெரிந்து கொள்ளவில்லையே! உன்னை ஊருக்கு அனுப்பிவடடு. நான் தனியாக இங்கே இருக்கமுடியுமா சொல்?" என்றான்.
சாவித்திரி அவன் பிடியிலிருந்து தன் கைகளை உதறி விடுவித்துக் கொண்டாள். பின்பு அவனை ரோஷத்துடன் நிமிர்ந்து பார்த்து, "உங்களால் ரெயில் ஏற்றிவிடமுடியுமா, முடியாதா என்பதைச் சொல்லுங்கள்! வேறு எந்த ராமாயணமும் எனக்கு வேண்டாம்!" என்று கூறிவிட்டு வழக்கம்போல் போர்வையை உதறிப் போர்த்திக்கொண்டு படுத்துவிட்டாள்.
அதே சமயத்தில் சமையலறையில், சாப்பாட்டுக்கு அப்புறம் ஸ்வர்ணமும், ஸரஸ்வதியும் மெதுவான குரலில் பேசிக் கொண்டிருந்தார்கள்.
"என்னம்மா ஸரஸு! இப்படிப்பட்ட சண்டியாக வந்து வாய்த்திருக்கிறதே" என்று ஸ்வர்ணம் கவலையுடன் கேட்டாள் ஸரஸ்வதியை.
ஸரஸ்வதியின் மனதில் வேதனை நிரம்பியிருந்தது. முகத்தை ஒரு தினுசாக அசைத்து அவள், "இந்த அத்தானிடமும் தவறு இருக்கிறது அத்தை. அவள் இஷ்டப்படி இருந்துவிட்டுப் போகட்டுமே!" என்றாள்.
ஸ்வர்ணம் பழைய நாளைய மனுஷி. புருஷன் சொல்லி மனைவி கேட்டு பக்தியுடன் நடந்து கொள்ளவேண்டும் என்கிற பண்பாட்டில் ஊறிப்போனவள். அத்துடன் தன் செல்லப் பிள்ளையின் மனம் நோகும்படி எதிர்த்துப் பேசிய சாவித்திரியிடம்
அவளுக்கு அடங்காத கோபம் ஏற்பட்டிருந்தது.