Flexi Classics தொடர்கதை - இருளும் ஒளியும் - 13 - ஸரோஜா ராமமூர்த்தி
இருளும் ஒளியும் : 13. பிறந்த வீட்டுக்கு
அடுத்த நாள் அதிகாலையில் சாவித்திரியை ரெயில் எற்றுவதற்காக அரை மனத்துடன் ரகுபதி அவளுடன் வண்டியில் ஏறி உட்கார்ந்தான். பெரிய நகரமாக இருந்தால் ஒருவர் வீட்டில் நடக்கும் விஷயங்களை இன்னொருவர் அவ்வளவாகக் கவனிக்கமாட்டார்கள். அந்த ஊர் சற்றுக் கிராமாந்தரமாக இருக்கவே அண்டை அயலில் இருக்கும் பெண்கள் வாசலில் கோலமிட வந்தபோது அதிசயத்துடன் கோலத்தைப் பாதியில் நிறுத்திவிட்டு ஸ்வர்ணத்தின் வீட்டு வாசலில் வண்டி நிற்பதைக் கவனித்தார்கள். சாவித்திரியும் ரகுபதியும் வண்டி ஏறுவதற்கு முன்பு கசமசவென்று ஏதோ பேசப்படுவதையும் கேட்டார்கள்.
திடுமென்று நாட்டுப்பெண் ஊருக்குப் போவதை ஸ்வர்ணம் துளிக்கூட விரும்பவில்லை. "எங்கள் நாளில் இப்படியா இருந்தோம்? புருஷன் ஏதோ கோபித்துக்கொண்டு அடிக்கிறதும் உண்டு. இரண்டு நாள் புருஷனோடு பேசாமல் இருப்போம். அப்புறம் சமாதானம் ஆகிப் பேசுகிறதில் எவ்வளவு இன்பம் என்பதைச் சொல்லவே முடியாது. அதையெல்லாம் பாராட்டலாமா?" என்று சொல்லி மாய்ந்து போனாள்.
"புருஷன், மனைவியை அடிக்கிறது தவறு அத்தை ! உனக்கு, இந்தக் காலத்து விஷயமே தெரியவில்லை. நீ என்னவோ அந்த நாளைப்பற்றியே பேசிக்கொண்டு இருக்கிறாயே!" என்று ஸரஸ்வதி கோபித்துக்கொண்டாள்.
கணவனும், மனைவியும் ரெயில் நிலையத்தை அடையும் வரையில் ஒருவரோடொருவர் பேசவில்லை. ரெயில் நிலையத்தினுள் அதிகக் கூட்டமில்லாமல் இருக்கவே ரகுபதி சாவித்திரியின் அருகில் நெருங்கி, 'இப்பொழுதாவது கோபம் தணிந்து விட்டதா? திரும்பி வீட்டுக்குப் போய்விடலாமா? இல்லை, டிக்கெட் வாங்கித்தான் வர வேண்டுமா?" என்று குறும்புச் சிரிப்புடன் கேட்டான்.
"இது என்ன விளையாட்டு? அழுகிற குழந்தைக்கு மிட்டாய் வாங்கித்தருகிற மாதிரி குழைந்து குழைந்து என்ன பேச்சு வேண்டிக்கிடக்கிறது? ரெயில் வந்துவிட்டால் நம் தர்க்கத்தை ரத்துக் கொண்டு நிற்காது! பேசாமல் போய் டிக்கெட் வாங்கி வாருங்கள்" என்று சாவித்திரி கோபத்துடன் பொரித்து தள்ளினாள்.
ரகுபதியின் மனத்தை ஊசியால் 'நறுக்'கென்று குத்துவது போல் அவள் வார்த்தைகள் தைத்தன. அவன் வேறெதுவும் பேசாமல் டிக்கெட்டை வாங்கி வந்து அவளிடம் கொடுப்பதற்கும் ரெயில் வருவதற்கும் சரியாக இருந்தது. கணவன், மனைவி என்கிற பந்தம் எவ்வளவு நெருங்கியதாக இருந்தாலும் சாவித்திரிக்கும் ரகுபதிக்கும் ஏற்பட்டிருந்த பிளவு அசாதாரண மாகத்தான் இருந்தது. ஜன்னலின் மீது கையை ஊன்றி முகத்தைச் சாய்த்துக்கொண்டு உட்கார்ந்திருக்கும்