சாவித்திரியின் வெகு சமீபத்தில் பெட்டிக்கு வெளியேதான் ரகுபதி நின்றிருந்தான். இருந்தாலும் அவர்கள் இருவரின் மனங்களும் வெவ்வேறு துருவங்களைப் பார்த்துக்கொண்டிருந்தன. ரெயிலின் 'கார்டு' தன் ஊதலை எடுத்து ஊதிக் கொடியைப் பறக்கவிட்டு ஆட்டினார். திக்கித் திணறி ரகுபதி, "ஊருக்குப் போனதும் கடிதம் போடு" என்றான். சாவித்திரி மௌனமாகத் தலையை அசைத்தாள்.
மனைவியை ரெயில் ஏற்றிவிட்டுக் கால் நடையாகவே திரும்பி பாகுபதி வீட்டுக்கு வரும்போது பலமுறை அவன் மனம் அவனையும் அறியாமல் சாவித்திரியையும், ஸரஸ்வதியையும் ஒப்பிட்டுப் பார்த்தது. இப்பொழுது நடந்தது மாதிரி இருந்தது அவனுக்கு அந்தச் சம்பவம். ஒரு நாள் ஸரஸ்வதியை - அவ ளுக்குப் பன்னிரண்டு வயசாக இருக்கும் போது - ஏதோ ஒரு பாட்டைப் பாடச் சொல்லி வற்புறுத்தினான் ரகுபதி. ஓடி விளையாடும் பருவத்தில் மணிக்கணக்காக உட்கார்ந்துப் பாடிப் பாடி அலுத்துவிட்டது அவளுக்கு. ஆகவே சற்றுக் கோபத் துடன், "போ அத்தான்! உனக்கு இது ஒரு பைத்தியம்! என்னாலே இனிமேல் பாட முடியாது போ" என்று கூறி எழுந்து சென்ற ஸரஸ்வதியின் பறக்கும் மேலாக்கைப்பற்றி ரகுபதி' இழுத்தபோது அது கிழிந்து போய்விட்டது.
"புத்தப் புதுசையெல்லாம் கிழித்து விடுகிறாயே அத்தான்!" என்று இரைந்தாள் ஸரஸ்வதி.
"கத்தாதே இப்படி ராக்ஷசி மாதிரி!" என்று அவள் கொவ்வைக் கன்னங்களை அழுத்திக் கிள்ளிவிட்டான் ரகுபதி. உதடுகள் துடிக்க அவனை நீர் மல்கும் விழிகளால் பார்த்துவிட்டு உள்ளே ஓடிவிட்டாள் ஸரஸ்வதி:
"ஐயோ பாவம்! தாயில்லாக் குழந்தை! முரட்டுத்தனமாகக் கிள்ளிவிட்டோமே. பார்த்து ஆறுதல் கூறவேண்டும்" என்று அவளைத் தேடி. ரகுபதி சென்ற போது அவளாகவே வலுவில் எதிரில் வந்து. "அத்தான்! காப்பி சாப்பிடாமல் மறந்து போய் விட்டாயே இன்றைக்கு. ஆறிப்போகிறதே" என்று சுடச்சுட காபியை எடுத்துவந்து அவன் கையில் கொடுத்தாள். ரோஜாக் கன்னம் இன்னும் சிவந்துதான் இருந்தது. "கிள்ளி விட்டேனே. வலிக்கிறதா?" என்று கேட்க அவனுக்கு வெட்கம்.
" நீதான் கிள்ளினாயே!" என்று மறுபடியும் அந்த சம்பவத்தை நினைவு படுத்த அவளும் வெட்கினாள்.
நேற்று ரகுபதி மனைவியின் கரங்களைப் பிடித்துக்கொண்டு, "அடித்து விட்டேனே" என்று மனம் வருந்தியபோது சாவித்திரி அதைப் பாராட்டவில்லை அல்லவா? ' அடிப்பதை அடித்தாயிற்று. தோரணையில் உதாசீனமாகத்தானே பேசினாள்?
ரகுபதி சாம்பிய மனத்துடன் வீட்டை அடைந்தான். யந்திரம்போல ஒருவருடனும் பேசாமல் தன் வேலைகளைக் கவனித்துக்கொண்டான். ஸ்வர்ணமும், ஸரஸ்வதியும் அவனுடன் ஒன்றுமே பேசவில்லை. 'அவனாகவே ஏதாவது பேசட்டும்’ என்று ஸ்வர்ணம் நினைத்தாள்.