பார்த்துக் கேட்டார் ராஜமையர்.
"இது என்னடி அதிசயம். ஒரு கடுதாசி போட்டிருந்தால் இங்கேயிருந்து யாராவது வந்து அழைத்து வந்திருக்க மாட்டோமா?" என்று பாட்டி அதிசயம் தாங்காமல் கேட்டுவிட்டுப் பேத்தியைப் பார்த்தாள்.
சாவித்திரி பதில் எதுவும் கூறாமல் காமரா அறைக்குள் சென்று பெட்டியை வைத்துவிட்டு அவளைத் தொடர்ந்து அறைக்குள் நுழைந்த மங்களத்தின் தோளில் தலையைச் சாய்த்துக்கொண்டு தேம்பித் தேம்பி அழுதாள். அப்புறம் மாமியார் வீட்டில் தனக்கு ஏற்பட்ட கஷ்டங்களைச் சாவித்திரி தாயிடம் கூறவும், அது வீடு முழுவதும் பரவுவதற்குச் சில நிமிஷங்கள் கூடப் பிடிக்கவில்லை.
”அடிக்கிறதாவது? ஹூம். . பதினெட்டு வயசு வரையில் வளர்த்துக் கொடுத்தால் அடிக்கிறதாவது? ஹும் . ." என்று ராஜமையர் திருப்பித் திருப்பித் தாம் சொன்ன வார்த்தைகளையே சொல்லிக்கொண்டிருந்தார்.
"அடிப்பார்கள். நாளைக்கு இவளை வேண்டாம் என்று தள்ளியும் வைப்பார்கள். வீட்டிலேதான் பெண் குதிர் மாதிரி வளர்கிறதே!" என்று பாட்டி, சம்பந்தம் இல்லாமல் பேச ஆரம்பித்தபோது சந்துரு , திடுக்கிட்டான். ’ஸரஸ்வதியைக் குறித்தா இவ்வளவு கேவலமாகப் பேசுகிறாள் பாட்டி? ரகுபதி ஒரு கல்யாணம் பண்ணிக்கொண்டு, அந்த மனைவியைத் தள்ளி வைத்த பிறகு தன்னை மணக்கவேண்டும் என்று விரும்புகிற பெண்ணா அவள்?' - பாட்டியின் சொல்லைப் பொறுக்கமுடியாமல் சந்துரு சற்று இரைந்து. "சரி, சரி, எல்லாவற்றையும் கொஞ்சம் பொறுமையாக ஆராய்ந்து விசாரிக்கலாம். வாய்க்கு வந்ததைப் பேசிக்கொண்டு நிற்கவேண்டாம்" என்று கூறினான்.
சாப்பிடும் கூடத்தில் சாவித்திரியின் பக்கத்தில் சீதா வந்து உட்கார்ந்து, "உனக்கும், அத்திம்பேருக்கும் ஏதோ ஊடல் போல இருக்கிறது! தமிழ்க் கவிதைகளையும், தலைவன், தலைவி ஊடல் பாடல்களையும் படித்துவிட்டு அத்திம்பேர் உன்னிடம் ஊடலை ஆரம்பித்திருக்கிறார் போல இருக்கிறது! நடுவில் யாராவது தூது செல்வதற்கு இருந்திருந்தால் நீ இங்கே வந்திருக்கமாட்டாய் இல்லையா சாவித்திரி? அப்படித்தானே?" என்று குறும்பு தவழக் கேட்டாள்.
"நாளைக்கு உனக்கு வரப்போகிற புருஷன் உன்னைக் கன்னத்தில் நாலறை அறைந்து வீட்டைவிட்டு வெளியே தள்ளினால், நீ அதை ’வேடிக்கை’ன்னு நினைத்துக்கொண்டு அழகாகக் குடித்தனம் செய்து கொண்டு இருப்பாய்" என்று பாட்டி உரக்க இரைய ஆரம்பித்தாள், தன் சின்னப் பேத்தியைப் பார்த்து.
சீதாவுக்கு உண்மையிலேயே தன் தமக்கைமீது கோபம் ஏற்பட்டது.