”கணவன் அடிக்கிறான் என்றே வைத்துக்கொள்வோம். வீட்டைவிட்டுத் துரத்துகிறான் என்றே வைத்துக்கொள்வோம். வீடு என்பது கணவன், மனைவி இருவருக்கும் சொந்தமான இடம். இதிலிருந்து ஒருவரையொருவர் வெளியே போகச்சொல்ல யாருக்கு அதிகாரம்? அப்படியே அவன் வற்புறுத்தினாலும், 'சீ, சீ, உங்களையே கதி என்று நம்பி வந்திருக்கும் என்னை, என் வீட்டைவிட்டு வெளியேற்ற உங்களுக்கு வெட்கமில்லையா? அவமானமாக இல்லையா? பேசாமல் இருங்கள். என் வீட்டுக்கு நான் தான் அரசி' என்று கூறிவிட்டு நான் உள்ளே போய் விடுவேன். காலப் போக்கில் எவ்வளவோ மனஸ்தாபங்கள் கரைந்து போய்விடுகின்றன. இதைத்தானே அன்னை கஸ்தூரிபாயும் நமக்குப் போதிக்கிறார்?" என்று சீதா ஆவேசத்துடன் பேசினாள். அவள் அப்பொழுது சந்துரு லைப்ரரியிலிருந்து வாங்கிவந்த காந்திஜியின் 'சத்திய சோதனை’யைப் படித்துக் கொண்டிருந்தாள்.
"சீதா! நீ பேசாமல் இருக்கமாட்டாயா? உன்னை அதிகம் படிக்கவைப்பதே ஆபத்தாக முடியும் போல் ! இருக்கிறதே!" என்று ராஜமையர் அதட்டிய பிறகுதான் அப்பாவும் விஷயத்தைப் பிரமாதப்படுத்த விரும்புகிறார் என்பதைச் சீதா தெரிந்து கொண்டாள்.
சாவித்திரியின் கல்யாணத்துக்காக ராஜமையர் -ஆறாயிரம் ரூபாய்க்குமேல் செலவு செய்திருக்கிறார். விமரிசையாகக் கல்யாணம் செய்தார். மாப்பிள்ளை ரொம்பவும் நல்ல பிள்ளை என்று முடிவு கட்டியிருந்தார். பிக்கல், பிடுங்கல் ஒன்றும் இல்லை. பெண் சுதந்தரமாக வாழ்வாள் என்றும் எதிர்பார்த்தார். ஆனால், கல்யாணம் நடந்த நான்கு மாதங்களுக்குள் கணவனுடன் மனஸ்தாபப்பட்டுக்கொண்டு தன்னந்தனியே வந்து நிற்கும் மகளைப் பார்த்ததும், பொறுமைசாலியான அவர் மனமும் கோபத்தால் வெகுண்டது: எரியும் நெருப்புக்கு விசிறி கொண்டு விசிறுவது போல அவர் தாயார் மேலும் தொடர்ந்து. "ஏண்டா அப்பா! குழந்தையை அடித்துத் துரத்தும்படி என்னடா கோபம் வந்துவிட்டது அவர்களுக்கு? சீர்வரிசைகளில் ஏதாவது - குறைந்து போய்விட்டதா? சாவித்திரிதான் என்ன அழகிலே குறைவா? எதறகாக இந்தமாதிரி பண்ணியிருக்கிறார்கள்?" என்று கேள்விமேல் கேள்வியாகக் கேட்டு அவரைத் திணற அடித்தாள்.
"பணம் காசைப்பற்றி என் மாமியார் வீட்டாருக்கு ஒருவிதக் குறையுமில்லை பாட்டி. அவர் இஷ்டப்படி நான் வீணை கற்றுக்கொள்ள வேண்டுமாம்! சங்கீதம் தெரிந்தவளாக இருந்தால்தான் அவர் மனசுக்குப் பிடித்தமாக இருக்குமாம்!" என்று பாட்டியின் கேள்விகளுக்குப் பதில் அளித்தாள் சாவித்திரி.
"அப்பா! இவ்வளவுதானா? பேஷாகக் கற்றுக்கொள்கிறது. இதிலே சண்டைக்கும், சச்சரவுக்கும் இடமில்லையே. அப்படி உனக்குச் சங்கீதம் பயின்றும் வராமல் போனால் அத்திம்பேர் தன்னால்