(Reading time: 7 - 13 minutes)
Irulum oliyum
Irulum oliyum

Flexi Classics தொடர்கதை - இருளும் ஒளியும் - 17 - ஸரோஜா ராமமூர்த்தி

இருளும் ஒளியும் : 17 'நினவிருக்கிதா ?'

திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகள் துரிதமாக நடந்து கொண்டிருந்தன. ஆவலுடன் ஒவ்வொரு நாளும் மனைவியின் வரவை எதிர்பார்த்துக்கொண்டிருந்தான் ரகுபதி. கோபத்தைப் பாராட்டாமல் கடிதமும், அழைப்பும் அனுப்பிய பிறகு வராமல் இருக்கமாட்டார்கள் என்றும் நினைத்தான். ஸ்வர்ணம் மட்டும் அடிக்கடி, "அவர்கள் என்ன பண்ணப்போகிறார்களோ? வருகிறதானால் கடிதம் ஏதாவது போட-மாட்டார்களா?" என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.

நண்பர்கள் எல்லோரும் வருவார்கள். ”எங்கேயடா உன் மனைவி?" என்று துளைப்ப ஆரம்பித்து விடுவார்கள். கல்யாணமாகி வந்த புதுசிலேயே நண்பர்கள் சாவித்திரியைத் தத்தம் வீடுகளுக்கு அழைத்து வரும்படி ரகுபதியைத் தொந்தரவு செய்து கொண்டிருந்தார்கள். ஒன்றிரண்டு பேர் ரகுபதியின் வீட்டைத் தேடியே வந்து பார்த்துவிட்டுப் போனார்கள். இவர்களுக்குப் பதில் சொல்லுவதற்குப் போதுமென்று ஆகிவிடும்.

தெருவில் வண்டி ஏதாவது போனால் கூட ஸ்வர்ணம் கைக் காரியத்தைப் போட்டுவிட்டு வாசலில் வந்து எட்டிப் பார்த்து விட்டுப் போவாள். 'வருகிறார்களோ இல்லையோ' என்று தனக்குத்தானே சொல்லிக் கொள்வதில் அவளுக்கு ஒரு திருப்தி ஏற்பட்டது. ரகுபதியின் மனம் நிலை கொள்ளாமல் தவித்தது. சாவித்திரியுடன் முதலில் யார் பேசுவது என்பது புரியாமல் மனத்தைக் குழப்பிக்கொண்டான் அவன். வலுவில் அவன் தான் அவளுடன் பேசவேண்டும் என்பதையும் அவன் நன்குணர்ந்திருந்தான். பிடிவாதக்காரியுடன் வேறென்ன செய்ய முடியும்?

யோசித்தவண்ணம் உட்கார்ந்திருந்த ரகுபதியின் முன்பு ஸரஸ்வதி இளமுறுவலுடன், "அத்தானுக்கு என்னவோ பலமான யோசனை!" என்று சொல்லிக்கொண்டே தட்டில் சிற்றுண்டியைக் கொண்டுவந்து வைத்தாள்.

"என்ன யோசனை இருக்கப்போகிறது? எல்லோருக்கும் அழைப்பு அனுப்பியாகி விட்டதா என்று நினைத்துப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். வேறொன்றும் இல்லை!" என்று சலிப்புடன் பதிலளித்தான் அவன்.

"போ, அத்தான். உன் மனசில் இருக்கிற ஏக்கந்தான் முகத்திலேயே தெரிகிறதே. நான் என்ன பச்சைக் குழந்தையா?"" என்று அவளும் வருத்தம் தொனிக்கக் கூறினாள்.

'தான் சந்தோஷப்படும் போது அவள் பார்த்துச் சந்தோஷப்படவும், தான் வருந்தும்போது அவள் வருந்தவும் ஸரஸ்வதிக்கும் தனக்கும் அப்படி என்ன பந்தம் இருக்கிறது?' என்று ரகுபதி யோசித்தான். ஊஞ்சல் சங்கிலியைப் பிடித்துக் கொண்டு, எண்ணெய் தேய்த்து ஸ்நானம் செய்த கூந்தலைப் பின்னிவிடாமல், முதுகில் புரளவிட்டுக் கண்களில் கரைந்து இமைகளில் சற்று அதிகமாகவே வழியும் மையுடன் அவனைப் பார்த்து முறுவலித்துக்கொண்டே நின்றாள்

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.