(Reading time: 7 - 13 minutes)
Irulum oliyum
Irulum oliyum

ஒருவருக்கும் தெரியாமல் நீ போய் சாவித்திரியை அழைத்து வந்துவிடு. அத்தைக்குக்கூடத் தெரிய வேண்டாம். என்ன இருந்தாலும் அவள் அந்த நாளைய மனுஷி. ஏதாவது சொல்லுவாள்" என்றாள்.

ரகுபதியின் கலங்கிய கண்களில் வைராக்கியத்தின் ஒளி வீசியது.

"அழகாகப் பேசுகிறாயே ஸரஸு? தவறு செய்தவன் நானாக இருந்தாலும் அதற்காக அவளிடம் மனம் வருந்தி இங்கிருந்தபோதே அவளைப் போகவேண்டாம் என்று தடுத்துப் பார்த்தேன். ஊருக்குப் போன பிறகு கடிதம் போடும்படி வற்புறுத்திச் சொன்னேன். எனக்கு யார் பேரிலும் வருத்த மில்லை என்று தெரிவிக்க என் மாமனாருக்கு அழைப்பு அனுப்பிக் கடிதமும் போட்டிருக்கிறேன். இனியும் நான் போய் அவளை வேண்ட வேண்டுமென்று விரும்புகிறாயே. மனிதனுக்குச் சுய மரியாதை என்பது இல்லையா?" என்று சற்றுக் கோபத்துடன் கூறினான் ரகுபதி.

அதற்குமேல் ஸரஸ்வதியால் ஒன்றும் பேச முடியவில்லை. ஏதோ ஒருவித ஏக்கம் மனத்தைப் பிடித்து அழுத்த அவள் அங்கிருந்து தன் அறைக்குள் சென்றுவிட்டாள். கற்றைக் கூந்தல் காற்றில் பறக்க மெதுவாக அவள் போவதையே பார்த்துக் கொண்டிருந்த ரகுபதி, பெருமூச்செறிந்தான். அவள் உள்ளே சென்ற பிறகுதான், அவள் திறப்பு விழாவுக்கு என்ன பாடப் போகிறாள் என்று கேட்காமல் போனதற்கு வருந்தினான் ரகுபதி. அவள் எதிரில் தான் உற்சாகம் குறைந்து இருந்தால், அவள் மனமும் வாடிப் போகுமே என்றும் நினைத்தான். வாடிய உள்ளத்திலிருந்து கிளம்பும் பாட்டும் சோகமாகத்தானே இருக்கும்? இப்பொழுதெல்லாம் ஸரஸ்வதி அதிகமாகப் பாடுவதே யில்லை. ஏன் பாடுவதில்லை? ஒருவேளை அவன் வருத்தமாக இருக்கிறான் என்று நினைத்துப் பாடுவதையே விட்டுவிட்டாளோ? சீ... இனிமேல் அவள் எதிரில் ரகுபதி உற்சாகத்துடன் நடந்து கொள்ளவேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டான். மெதுவாகத் தனக்குள் அவன், 'குழலோசை கேட்குதம்மா- கோபால கிருஷ்ணன் குழலோசை கேட்குதம்மா-' என்று பாடுவதை ஜன்னல் வழியாக அறைக்குள்ளிருந்து இரு கமலநயனங்கள் பார்த்தன.

"நன்றாகப் பாடுகிறாயே அத்தான். உனக்குப் பாட்டைக் கேட்கத்தான் தெரியும் என்று நினைத்திருந்தேன். பாடவும் தெரிந்திருக்கிறதே" என்று ஸரஸ்வதி தன் மகிழ்ச்சியை உள்ளிருந்தே அறிவித்துக்கொண்டாள்.

----------------

தொடரும்

Go to Irulum oliyum story main page

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.