கேட்டுவிட்டு, "தங்கம்! இங்கே வந்து உட்கார் அம்மா. நாங்களும் உனக்குத் தெரிந்தவர்கள்தாம். பயப்படாமல் இப்படி வா" என்று அன்புடன் அழைத்தாள். அதற்குள் அலமு அத்தை ஸரஸ்வதி யைப் பார்த்து. "பயப்படவும் இல்லை, ஒன்றுமில்லை. நீ பெரிய பாடகி. கச்சேரியெல்லாம் பண்ணப்போகிறாயாம். உன்னைப் பார்க்கவேண்டும் என்று ஆசைப்பட்டாள். அழைத்துவந்தேன். கொஞ்சம் பழகிவிட்டால் 'லொட லொட' வென்று பேச ஆரம்பித்து விடுவாளே" என்றாள்.
'ஓஹோ! நான் கச்சேரி செய்யப்போவதைத் தெரிந்து கொண்டுதான் அலமு அத்தை வந்திருக்கிறாளோ!" என்று ஸரஸ்வதி மனத்துக்குள் வியந்து கொண்டே, ”அப்படியா?" என்று தன் மகிழ்ச்சியை அறிவித்துக்கொண்டாள்,
தங்கமும், ஸரஸ்வதியும் சில மணி நேரங்களில் மனம் விட்டுப் பழகிவிட்டார்கள். 'அக்கா, அக்கா' என்று அருமையாகத் தன்னைக் கூப்பிடும் அந்தப் பெண்ணிடம் ஸரஸ்வதிக்கு ஏதோ ஒருவிதப் பாசம் விழுந்துவிட்டது. வெளியே சென்றிருந்து திரும்பிய ரகுபதிக்கு முதலில் தன் அத்தையைப் பார்த்ததும் தூக்கி வாரிப்போட்டது.
"ஏண்டா இப்படி இளைத்துவிட்டாய் ரகு?" என்று உள்ளூற ஆதங்கத்துடன் தான் செய்து வந்த பொரிவிளாங்காய் உருண்டையையும், முறுக்கையும் தட்டில் வைத்துக் கொடுத்து விட்டு விசாரித்தாள் அலமு. வீட்டில் உருக்கிய நெய்யில் செய்த முறுக்கை ரசித்தபடியே ரகுபதி ஸரஸ்வதியுடன் உட்கார்ந்து பூத்தொடுக்கும் பெண்ணையும் கவனித்தான். சற்று முன் பழைய சீட்டிப் புடைவையைக் கட்டிக்கொண்டிருந்த தங்கம், இப்பொழுது அழகிய பூப்போட்ட வாயல் புடைவையை உடுத்திருந்தாள். "சீ. சீ, இது ஒன்றும் நன்றாக இல்லை. இந்தா, இதை உடுத்திக்கொள்" என்று ஆசையுடன் ஸரஸ்வதி கொடுத்த மருதாணிச் சிவப்பு வாயல் தங்கத்தின் தங்க நிற மேனிக்கு மிகவும் அழகாக இருந்தது.
'சரசர’ வென்று விரல்கள் மல்லிகையைத் தொடுப்பதில் முனைந்திருந்தன. சில நிமிஷங்களுக்குள் மல்லிகைச் சரம் தொடுத்துவிட்டாள். அதை அழகிய மாலையாக வளைத்துக் கட்டிவிட்டு அவள் நிமிர்ந்தபோது கூடத்தில் ஊஞ்சலில் உட்கார்ந்து தன்னையே கவனிக்கும் ரகுபதியின் கண்களைத் தங்கம் சந்தித்தாள்.
"ஸரஸ்வதியின் பாட்டைக் கேட்க வேண்டும் என்று ஆசைப்பட்டாள். அவளைப் பார்க்கவேண்டும் என்று விரும்பினாள். அவள் யாரென்று தெரிகிறதாடா உனக்கு? மறந்து போயிருப்பாய் நீ" என்று அலமு ஆரம்பித்து, "என் கல்யாணத்தின் போது உனக்கு ஆறு வயசு இருக்கும். நம் கிராமத்துக்கு வந்திருந்தாயேடா. தொட்டிலில் கிடந்த தங்கத்தைப் பார்த்து விட்டு, இந்தப் பாப்பா அழகாக இருக்கிறது அத்தை. அப்பா! எவ்வளவு பெரிய கண்கள் அத்தை. இந்தப் பாப்பாவை நான் எடுத்துக்கொண்டு போகிறேன் விளையாட" என்றெல்லாம்