"தங்கம்! இதென்ன அம்மா! ஏன் அழுகிறாய்? உன்னை யாராவது ஏதாவது சொன்னார்களா?" என்று கேட்டான்.
தங்கம் மெதுவாக 'இல்லை' என்று தலையசைத்தாள். பிறகு அழுகையின் நடுவில் சிரித்துக்கொண்டே, "நான் பாடியது நன்றாக இருக்கிறதா அத்தான்? என் குரல் நன்றாக இருக்கிறதா?" என்று கேட்டாள். அழுகையின் நடுவில் பளிச்சென்று தன் முத்துப்போன்ற பற்கள் தெரிய நகைக்கும் அந்தப் பெண்ணின் முகவிலாசத்தை உற்றுக் கவனித்தான் ரகுபதி. வானவெளியில் சஞ்சரிக்கும் கார்மேகத்தைக் கிழித்துக்கொண்டு
களை சுடர் விட்டது.
"நீ நன்றாகப் பாடுகிறாய். உன் குரலும் இனிமையாக இருக்கிறது. ஸரஸ்வதியிடம் கொஞ்சகாலம் சங்கீதம் பயின்றால் பேஷாகப் பாடலாமே. ஆமாம்.... நீ ஏன் அழுதாய்?" என்று திரும்பவும் கேட்டான் ரகுபதி.
அவள் மிருந்த சங்கோஜத்துடன் அவனைப் பார்த்து, "ஒரொரு சமயம் என்னைப்-பற்றியே எனக்குப் பலத்த சந்தேகம் வந்துவிடுகிறது. ஒரு வேளை என்னைத்தான் பிடிக்கவில்லையோ என்று நினைக்கிறேன். என்னைக் கல்யாணம் செய்து கொள்ள அதற்காகப் பெண் பார்க்க எங்கள் வீட்டுக்கு இதுவரையில் ஏழெட்டுப் பேர்கள் வந்தார்கள். அம்மா கடன் வாங்கியாவது பஜ்ஜியும், ஸொஜ்ஜியும் செய்துவைப்பாள். வருகிறவர்கள் முதலில் நாங்கள் வசிக்கும் ஓட்டு வீட்டைப் பார்ப்பார்கள். பிறகு எங்கள் வீட்டில் புழங்கும் சாமான்களின் தராதரத்தை மதிப்பிடுவார்கள். அப்புறம் என்னைப் பாடச் சொல்லுவார்கள். இவ்வளவையும் செய்துவிட்டுப் பெண்ணைப் பிடித்திருக்கிறது; பணங்காசுதான் குறைவு' என்று சொல்லிவிட்டுப் போய்விடுவார்கள். எப்படியோ ஆயிரம் ரூபாய் செலவழித்து ஒரு நாள் கல்யாணம் பண்ணிவிடுவாள், அம்மா. ஆனால் அவர்கள் கேட்கும் வெள்ளிப் பாத்திரங்களும், சீர் வரிசைகளுந்தான் அம்மாவைப் பயமுறுத்துகின்றன அத்தான்!"
’இருக்கிறவர்கள் தாராளமாகக் கொடுக்கட்டும். வாங்கு பவர்கள் தாராளமாக வாங்கிக்கொள்ளட்டும். ஆனால், பணத்தையும், தங்கத்தையும் ஒப்பிட்டு மதிப்புப் போடுவது சுத்தப் பைத்தியக்காரத்தனம்' என்று ரகுபதி நினைத்தான். "அழகில் சிறந்தவளாகக் குடித்தனப் பாங்குடன் இருக்கும் ஒரு பெண்ணை இந்தச் சமூகம் பணத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கிறதென்றால் சமூகம் சீர்திருந்திவிட்டது என்று கூறமுடியுமா? பாரதி பாடல்களைப் பாடும் வாலிபர்கள் மனம்தான் சீர்திருத்தி இருக்கிறதென்று சொல்லமுடியுமா?'
முகவாயில் கையை ஊன்றி யோசனையில் ஆழ்ந்திருந்த ரகுபதிக்கு முன்னால் ஸரஸ்வதி வந்து, "அத்தான்! நாளைக்குக் கடவுள் வாழ்த்து யார் பாடுகிறது?" என்று கேட்டாள்.
'தங்கத்துக்கு ஏதாவது சிறிய பாட்டாகக் கற்றுக் கொடு ஸரஸு. அவள் அழகாகப் பாடுகிறாள்.