'தங்கம்மா' என்று கபடமில்லாமல் அழைக்கும் அந்தக் கிராமவாசிகளின் அன்பை எனக்கு இங்கே காணமுடியவில்லை. இங்கேயும் உன் னைத் தேடி அநேகம் பெண்கள் வருகிறார்கள். உன்னுடைய அருமைத் தோழிகள் என்று சொல்லிக்கொள்கிறாய். ஆனால், அவர்கள் பகட்டாகப் பேசுகிறார்கள். மனம் விட்டு நீங்கள் எதுவும் பேசுவதில்லை. அன்று ஒரு பெண்ணைப் பார்த்து நீ கேட்டாயே, ' உன் கணவரிடமிருந்து கடிதம் வந்திருக்கிறதா? சௌக்யமாக இருக்கிறாரா?' என்று. அதற்கு அவள் ஒரு சிரிப்புச் சிரித்துவிட்டுத் தலையை மட்டும் ஆட்டிவிட்டாள். எங்கள் ஊரிலேயானால் கொள்ளை விஷயங்களைச் சொல்லி விடுவாளே அந்த மாதிரி ஒரு பெண்! உள்ளத்து உணர்ச்சிகளை வெளியிடுவதை அநாகரிகமாகக் கருதுகிறார்களோ என்னவோ உன் தோழிகள்!
"தங்கம்! நீ ரொம்பவும் புத்திசாலி. சேற்றிலே மலரும் தாமரையைப்போல உன்னை நினைக்கிறேன் தங்கம். ஏதாவது அசட்டுப் பிசட்டென்று பயந்து கொண்டு செய்துவிடாதே. உனக்குப் பிடிக்காதவரை மணந்து கொள்ளாதே. தெரியுமா?"
என்று விரலை ஆட்டிக் கண்டிப்புடன் எச்சரித்தாள் ஸரஸ்வதி.
----------------------
தொடரும்