உருகினார்' - சாதாரணமாக இந்த இடத்தை - ஸரஸ்வதி நான்கைந்து தடவைகள் பாடினாள். ரகுபதிக்கு மிகவும் பிடித்தமான பாட்டுதான். ஆனால் இன்றோ அவனுக்கு ஸரஸ்வதியின் பேரில் கோபம் வந்தது. சாவித்திரிக்கும், அவனுக்கும் இந்த ஜன்மத்தில் மட்டும் இல்லை; அந்த நாளில், கடந்த பிறவிகளிலிருந்தே தொடர்பு இருக்கிறது என்பதை ஸரஸ்வதி பாட்டின் மூலம் எச்சரிக்கிறாளோ என்று தோன்றியது!
'சட்! இவள் யார் என் சொந்த விஷயத்தில் தலையிட’ என்று முணு முணுத்தான் ரகுபதி. இதற்குள் மாடிப்படிகளில் ’தடதட' வென்று தங்கம் இரைக்க இரைக்க ஏறி ஓடி வந்தாள். நிதானமாக ஸரஸ்வதி அவள் பின்னால் வந்து நின்றாள். தங்கம் ஸரஸ்வதியைத் திரும்பிப் பார்த்து. "அக்கா! நான் கேட்கட்டுமா?" என்று கேட்டாள்:
* கேளேன். யார் கேட்டால் என்ன?" என்றாள் ஸரஸ்வதி சிரித்துக்கொண்டே.
"போ அக்கா! எனக்கு வெட்கமாக இருக்கிறது. நீயே கேட்டுவிடு" என்றாள் தங்கம் லஜ்ஜையுடன்.
”என்ன கேட்பதற்கு இவ்வளவு பீடிகை?" என்று ரகுபதி அவர்களை வினவிவிட்டு, இருவரையும் மாறி மாறிப் பார்த்தான்.
“ஒன்றுமில்லை அத்தான். தங்கம் பாட்டுக் கச்சேரியே அதிகம் கேட்டதில்லையாம். டவுனில் இன்று ஏதோ கச்சேரி இருக்கிறதாக நேற்றுச் சொன்னாயே; அதற்கு அவளும் வருகிறாளாம். இவ்வளவு தான் விஷயம்” என்றாள் ஸரஸ்வதி.
”அப்பா! இவ்வளவுதானா? என்னவோ சுயம்வரத்துக்கு ஏற்பாடு பண்ணுகிறமாதிரி அல்லவா வெட்கமும், நாணமும் நடுவில் வந்து விடுகிறது? என்னவோ என்று பார்த்தேன். வரட்டுமே. நீயுந்தான் வாயேன்" என்று அழைத்தான் ரகுபதி இருவரையும்.
தங்கம் சந்தோஷ மிகுதியினால் மறுபடியும் மாடிப்படிகளில் ’தடதட' வென்று வேகமாக இறங்கினாள். இடுப்பின் கீழே புரளும் பின்னல், இப்படியும் அப்படியும் ஆடி அசைவதையே கவனித்துக் கொண்டிருந்தான் ர்குபதி.
"என்ன அத்தான் பார்க்கிறாய்? தங்கம் இப்படி ஓடுகிறாளே என்றுதானே பார்க்கிறாய்? அந்தப் பெண் எதையும், எந்த வேலையையும் இப்படித்தான் ஓடி ஓடிச் செய்கிறாள். பாவம்" என்று ஸரஸ்வதி கூறிவிட்டு அங்கிருந்து கீழே சென்றாள்.
சாயந்தரம் நாலு மணிக்கு மூவரும் கச்சேரி கேட்பதற்கு நகரத்துக்குப் புறப்பட்டார்கள். ஸரஸ்வதி ஆரஞ்சு வர்ணப் புடைவையும். கறுப்பு ஜாக்கெட்டும் அணிந்திருந்தாள். தங்கம் மருதாணிச் சிவப்பில் ஸரஸ்வதியின் பட்டுப் புடைவையை உடுத்தி இருந்தாள். சங்கு போன்ற கழுத்தில் கரியமணிச்சரம் இரட்டை வடம் பூண்டு, நெற்றியில் பிறை வடிவத்தில் திலகமிட்டிருந்தாள் தங்கம், கைகளில் 'கலகல' வென்று ஒலிக்கும் சிவப்புக் கண்ணாடி