Flexi Classics தொடர்கதை - இருளும் ஒளியும் - 23 - ஸரோஜா ராமமூர்த்தி
இருளும் ஒளியும் : 23. சாலை வழியே
நகரத்திலிருந்து ரகுபதியின் வீட்டிற்கு இரண்டு மைல்களுக்குமேல் இருக்கும். சாலையில் இரண்டு பக்கங்களிலும் ஓங்கி உயர்ந்து வளர்ந்த அசோக மரங்கள் கப்பும் கிளைகளுமாகத் தழைத்து நின்றன. பகல் வேளைகளில் சூரியனின் வெப்பம் தெரியாமலும், இரவில் நிலாக் காலங்களில் பசுமையான இலைகளின் மீது நிலவின் கிரணங்கள் தவழ்ந்து விளையாடுவதாலும் அச்சாலை பார்ப்பதற்கு அழகாக இருக்கும். அங்கொன்றும், இங்கொன்றுமாகக் கட்டப்பட்டிருக்கும் பங்களாக் களிலிருந்து வீசும் மலர்களின் மணமும் சாலையில் லேசாகப் பரவுவதுண்டு. ஸரஸ்வதியைப் பஸ் ஏற்றிவிட்டுத் தங்கத்துடன் திரும்பிய ரகுபதி சிறிது நேரம் வரையில் ஒன்றுமே பேசவில்லை. வளைந்து செல்லும் அந்த அழகிய சாலையில் அவ்வப்போது ஒன்றிரண்டு கார்களும், வண்டிகளும் போய் வந்து கொண்டிருந்தன.
தங்கம் இதுவரையில் ஓர் ஆடவனுடன் தனித்து இரவு வேளையில் எங்கும் சென்றதில்லை. மனம் பயத்தால் ' திக் திக்' கென்று அடித்துக்கொள்ள, ரகுபதியைவிட்டு விலகி நாலடி முன்னாலேயே அவள் சென்றுகொண்டிருந்தாள். ரகுபதிக்கும், அவன் எதற்காகத் தங்கத்தைத் தனியாக அழைத்து வந்தான் என்பதும் புரியவே இல்லை. 'ஸரஸ்வதி என்ன நினைக்கிறாளோ? வீட்டில் அலமு அத்தையும், அம்மாவும் என்ன சொல்வார்களோ' என்றும் பயந்தான். மருட்சியுடன் அடிக்கடி அவனைத் திரும்பிப் பார்த்த தங்கம் ஒருவழியாக, "அத்தான்! உங்களுக்குத் தலைவலி குறைந்திருக்கிறதா? என்னையும் ஸரஸு அக்காவுடனேயே அனுப்பி இருக்கலாமே?" என்று கேட்டாள்.
ரகுபதி ஆவலுடன் அவள் முகத்தைப் பார்த்தான். ஒருவிதக் களங்கமும் இல்லாமல் விளங்கும் அந்த அழகிய வதனத்தில் உலாவும் இரண்டு பெரிய கண்களைக் கவனித்தான். வில்லைப்போல் வளைந்து இருக்கும் புருவங்களைக் கவனித்தான். எப்போதும் சிரிப்பதுபோல் இருக்கும் அவள் அழகிய அதரங்களைக் கவனித்தான். கானல் நீர் தொலைவில் பளபளவென்று மான்களுக்குத் தெரிவதில்லையா? நெருப்புப் பறக்கும் கடுங் கோடையில் தெளிந்த நீர்ப் பிரவாகம் பொங்கிப் பெருகுகிறது என்று எண்ணித்தானே மான் கூட்டங்கள் அங்கு விரைகின்றன? சாவித்திரி தன் வாழ்வில் ஏற்படுத்திய பள்ளத்தைத் தங்கத்தால் தங்கத்தின் அன்பினால் - நிரவமுடியும் என்று ரகுபதி ஏமாற்றம் அடைந்திருக்க வேண்டும். தன்னையே விழுங்கிவிடுவதைப்போல் கவனிக்கும் ரகுபதியைத் தங்கம் பார்த்தாள்.
"என்ன அத்தான்! அப்படிப் பார்க்கிறீர்களே? என்னைக் கல்யாணம் பண்ணிக்கொள்ள வந்தார்களே புமான்கள்! அவர்கள் யாருங்கூட இப்படிப் பார்க்கவில்லையே என்னை! . முதலில்