எங்கள் வீட்டுக் கூரையைப் பார்த்தார்கள். பிறகு கீழே அவர்கள் உட்கார விரித்திருப்பது, பழைய ஜமக்காளமா அல்லது விலையுயர்ந்த ரத்தினக் கம்பளமா என்பதைக் கவனித்தார்கள். அப்புறம், எங்கள் வீட்டு 'டிபனை'க் கவனித்தார்கள். பிறகு, 'மணப் பெண் வந்திருக்கிறாள். பாருங்கள் ஸ்வாமி! என்று அவர்கள் கவனத்தை என்பேரில் திருப்புவதற்கு நான் ஏதாவது பாடி ஆகவேண்டும். இதுவரையில் கவனிப்பதற்கு அவகாசம் இல்லாமல் இருந்தவர்களுக்குத் திடீரென்று என் மீது கருணை பிறந்துவிடும். ஒரு அம்மாள் என் அருகில் வந்து பரபர வென்று பின்னலிட்டிருக்கும் என் கூந்தலை அவிழ்த்து மறுபடியும் பின்னுவாள். 'இதென்ன ஆச்சரியம்?' என்று நான் அதிசயப் பட்டபோது எனக்கு இருப்பது நிஜமான கூந்தலா அல்லது செயற்கையா என்று கண்டுபிடிப்பதற்காகத்தான் இவ்வளவும் என்று தெரிந்தது! இதெல்லாம் ஒன்றுமில்லாமல் இருக்கும் போது நீங்கள் எதற்கு அத்தான் என்னை இப்படிப் பார்க்க வேண்டும்?" - இப்படிக் கூறிவிட்டு தங்கம் 'கலகல' வென்று சிரித்தாள்.
ரகுபதியின் முதுகில் யாரோ சாட்டையால் அடிப்பது போல் இருந்தது. தங்கத்தின் சிரிப்பொலியைக் கேட்டு. 'ஒருவேளை தனக்கு ஏற்பட்டிருந்த பலவீனத்தைத் தங்கம் கண்டுபிடித்து விட்டாளோ?' என்று நினைத்துப் பயந்து போனான். அவன் மெதுவான குரலில் அவள் அருகில் நெருங்கி, "தங்கம்! நாளைக்கு நீ ஊருக்குப் போகிறாயே. ஏன் இப்பொழுதே போக வேண்டுமா? இன்னும் கொஞ்சநாள் இருந்துவிட்டுப் போயேன்" என்றான்.
தங்கம் கபடமில்லாமல் சிரித்துக்கொண்டே, "எதற்காக அத்தான் என்னை இருக்கச் சொல்லுகிறீர்கள்? நான் இருப்பதால் உங்களுக்குச் சந்தோஷம் ஏற்படுகிறதா? ஒருவேளை சாவித்திரி மதனி ஊரிலிருந்து வருகிறாளா? அவளைப் பார்த்து விட்டுப் போகச் சொல்லுகிறீர்களா என்ன?" என்று கேட்டாள்.
ரகுபதி மறுபடியும் திடுக்கிட்டான். 'என்ன? இந்தப் பெண்ணுக்கு மனோதத்துவம் தெரிந்திருக்கிறதா? இதுவரையில் இன்று வரையில் - நிஷ்களங்கமாக இருந்த மனத்தில் களங்கம் ஏற்பட்டிருக்கிறது என்பதை எப்படிக் கண்டுபிடித்தாள் இவள்? ஒருவேளை நாம்தான் தத்துப்பித் தென்று நடந்து கொண்டு விட்டோமோ' என்று ரகுபதி மனத்தைக் குழப்பிக்கொண்டிருந்த சமயம், தங்கம் அவன் அருகில் நெருங்கி, "சாவித்திரி மதனிக்கும் உங்களுக்கும் ஏதோ மனஸ்தாபமாமே? எங்கள் ஊரில் பேசிக்கொண்டார்கள். உங்களிடம் கோபித்துக்கொண்டுதானே மதனி பிறந்தகம் போயிருக்கிறாள்? அப்படித்தானே அத்தான்? போகிறது. கோபத்தையெல்லாம் மறந்துவிடுங்கள். வரப் போகிற தீபாவளிப் பண்டிகைக்கு வேட்டகம் போய் மதனியை அழைத்து வந்துவிடுங்கள். ஊருக்குத் திரும்பும்போது எங்கள் ஊருக்கு வாருங்கள், அத்தான்" என்று அவனை அன்புடன் அழைத்தாள்.
தங்கம் சாதாரணப் பெண் தான். அறிஞர்கள் கற்றிருக்கும் ஜோதிஷ சாஸ்திரமும், மேதாவிகள்