Flexi Classics தொடர்கதை - இருளும் ஒளியும் - 24 - ஸரோஜா ராமமூர்த்தி
இருளும் ஒளியும் : 24. முள்ளின் வேதனை
பரிவுடன் மகனுக்குப் போர்வையைப் போர்த்திவிட்டுக் கீழே சென்ற ஸ்வர்ணத்திற்கு வருத்தம் தாங்கவில்லை. சங்கீத விழாவுக்கு நாட்டுப்பெண் வராத விஷயம் ஊராருக்குத் தெரியும். நல்லதோ கெட்டதோ எதுவும் ஊராருடைய அபிப் பிராயத்துக்கு இணங்கித்தான் நடக்க வேண்டியிருக்கிறது. இது உலக இயல்பு. ”இருந்து, இருந்து ஒரே பிள்ளை. வீட்டிலே லக்ஷணமாக நாட்டுப்பெண் இராமல், வந்ததும் வராததுமாகப் பிறந்த வீட்டில் போய் மாசக் கணக்கில் உட்கார்ந்து கொண்டிருப்பது அழகாக இருக்கிறது!" என்று நாத்தனார் அலமு வேறு எப்போதும் ஸ்வர்ணத்திடம் கூறி அவள் மனத்தை வாட்டிக்கொண்டிருந்தாள்.
சாவித்திரி வருவதற்கு முன்பாவது வீட்டில் நிம்மதியும் சந்தோஷமும் நிலவி இருந்தன. தினம் தவறாமல் ஸரஸ்வதி விடியற்காலமும், சாயந்தரமும் பாட்டைச் சாதகம் செய்து வந்தாள். இப்பொழுதெல்லாம் எப்பொழுதோ அத்தி பூத்தாற் போல் பாடுவது என்று வைத்துக்கொண்டுவிட்டாள் ஸரஸ்வதி. பூஜை அறையை மெழுகும்போதும், கோலம் போடும் போதும், இறைவனுக்கு மாலை கட்டும்போதும் மட்டும் மெதுவாக மனதுக்குள் பாடிக்கொள்வாள். பிறவியிலேயே அவளுடன் கலந்து விட்ட அந்த இசை இன்பம் அவள் மனத்தைவிட்டு ஒரு கணமும் அகலவில்லை. வாயைத் திறந்து பாடினால் தான், பாட்டா? ஊர் ஊராகச் சென்று கச்சேரிகள் செய்தால்தான் சங்கீதமா? நித்திரையிலும் விழிப்பிலும் அவள் மனம் இசை இன்பத்தை அநுபவித்துக்கொண்டே யிருந்தது.
ஸரஸ்வதியின் பரந்த மனத்திலும் ஒருவிதத் துயர் குடிகொண்டிருந்தது. அவளால்தான் வீட்டில் இவ்வளவு சச்சரவுகளும் நேர்ந்துவிட்டதாகக் கருதினாள். இசை விழாவின்போது, தான் கச்சேரி செய்ய ஒப்புக்கொண்டதே தவறு என்று நினைத்தாள். சாவித்திரியின் ஊருக்குச் சென்று அவளை அழைத்துவந்து ரகுபதியிடம் சேர்த்து விடுவது என்று கூட யோசித்துப் பார்த்தாள். ஆனால், அங்கு அவளுக்கு எந்த விதமான வரவேற்பு கிடைக்குமோ? இதற்குள் ஊர் வதந்திகள் ஒன்றுக்குப் பத்தாக இறக்கை கட்டிக்கொண்டு எப்படி எல்லாம் பறந்து சென்றிருக்கின்றனவோ? அத்தான் ரகுபதி கல்யாணம் பண்ணிக் கொண்டவுடனேயே அவள் அந்த வீட்டிலிருந்து விலகிச் சென்றிருக்க வேண்டும். அதைச் செய்யாமல் கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்யப் புகுந்த கதையாக இப்பொழுது நினைத்து வருந்துவதில் என்ன பிரயோஜனம் இருக்கிறது? இவ்விதம் நினைத்து வருந்திக்கொண்டே ஸரஸ்வதி, ரகுபதி கச்சேரியிலிருந்து வீடு திரும்புவதற்கு முன்பே தன் அறைக்குள் சென்று படுத்துக் கொண்டு விட்டாள். ரகுபதி வந்ததும், அவன் யாருடனும் அதிகம் பேசாமல் மாடிக்குச் சென்று படுத்துக் கொண்டதையும் அறிவாள். ஸ்வர்ணம் மாடியிலிருந்து கீழே வந்ததும் வருத்தம் தாங்காமல்