விடிந்தால் தங்கம் ஊருக்குப் போய் விடுவாள். ஆனால், ஸரஸ்வதிக்கு என் அசட்டுத்தனம் தெரிந்த பிறகு. அவளிடம் . எதிரில் நின்று பேசவே வெட்கமாக இருக்குமே!' என்று நினைத்து ரகுபதி வெட்கமடைந்தான். ஸரஸ்வதி பேசுவதைக் கேட்டுவிட்டுத் தங்கம் அந்த நள்ளிரவிலும் 'கலீ’ரென்று சிரித்தாள்.
"போடி அசடே! அத்தை விழித்துக்கொண்டுவிடப் போகிறாள். கதையைக் கேட்டுவிட்டு இப்படியா சிரிப்பார்கள்?" என்று தங்கத்தை அதட்டிவிட்டு ஸரஸ்வதி திரும்பிப் படுத்துக் கொண்டாள்.
ரகுபதி நீண்ட பெருமூச்சு விட்டான். 'நல்லவேளை! கதை பேசிக்கொள்கிறார்களா? என்னவோ என்று பயந்து போனேனே' என்று மெதுவாகத் தனக்குள் சொல்லிக் கொண்டே அறைக்குள் சென்றான்.
இரவு தூங்குவதற்கு நேரமாகவே ரகுபதி விடியற்காலம் அயர்ந்து தூங்கிவிட்டான். அவன் எழுந்திருக்கும்போது பொழுது நன்றாக விடிந்துவிட்டது. சமையலறையில் ஸரஸ்வதி, ஸ்வர்ணத்துக்கு உதவியாக வேலைகளைச் செய்து கொண்டிருந்தாள். தோட்டத்தைச் சுற்றிச் சுற்றிவரும் தங்கமும், அலமுவும் விடியற்காலையிலேயே ஊருக்குப் போய்விட்டதால் வீடு வெறிச்சோடிக் கிடந்தது. கூடத்து ஊஞ்சலில் உட்கார்ந்து தன் மேலாக்கு பறக்க வீசி வீசி ஊஞ்சலாடும் தங்கம், அவனிடம் ஒரு வார்த்தைகூடச் சொல்லாமல் ஊருக்குப் போய்விட்டாள்.
"அத்தானிடம் சொல்லிவிட்டு வருகிறேன்" என்று வேகமாக மாடிப்படிகளில் ஏறிய தங்கத்தின் கைகளை ஸரஸ்வதி பற்றி இழுத்தாள்.
"இந்தாடி அசடே! கொஞ்சங்கூட நாகரிகமே தெரிய வில்லையே உனக்கு? நீ இன்று ஊருக்குப் போவதைத்தான் ஆயிரம் தரம் சொல்லியாயிற்றே. நேற்றெல்லாம் உடம்பு சரியில்லையே அவனுக்கு. இப்போது போய் அவனைத் தொந்தரவு செய்வானேன்?" என்று உரிமையுடன் அதட்டி அவள் மாடிக்குப் போவதைத் தடுத்தவள் ஸரஸ்வதிதான்.
"எனக்குப் பதிலாக நீயே சொல்லிவிடு , அக்கா" என்று தங்கம் சிரித்துக்கொண்டே கூறிச் சென்றிருந்தாள்.
ரகுபதி தீவிரமாக யோசித்தான். 'கொத்துக் கொத்தாக ரோஜாச்செடியில் மலர்கள் குலுங்குகின்றன. 'பறிக்கவேண்டும்; முகர்ந்து பார்க்கவேண்டும்; அதன் மெல்லிய இதழ்களை வருடவேண்டும்' என்று ஒவ்வொருவரும் ஆசைப்படுவது இயற்கைதான். அதுபோல் அழகிய தங்கம் வந்தாள். முல்லைச் சிரிப்பால் என் மூடிய மனதை மலர வைத்தாள். பட்டுப் பூச்சி வர்ண ஜாலங்களை வீசுவதைப்போல், நொடிக்கொரு பேச்சும், நாழிக் கொரு வார்த்தையுமாக வளைய வந்தாள். மலர் செறிந்த ரோஜாச் செடியில் மலரைக் கிள்ளும்போது, 'சுரீர்' என்று தைக்கும் முள்ளைப்போல, 'ஊருக்குப் போகிறேன்' என்று ஒரு வார்த்தைகூடச் சொல்லாமல்