மனதைக் குத்திவிட்டு ஓடிப்போய்விட்டாள். மலரின் மென்மையை மெச்சுவதுபோல் முள்ளின் வேதனையையும் மெச்சித்தான், 'சபாஷ்' போடவேண்டும். நேற்று இரவு ஸ்ரீராமபிரான் கோவில் முன்பு கைகூப்பி வணங்கி வேண்டிக் கொண்டதை யெல்லாம் மனம் மறந்துவிட்டது. மறுபடியும், 'தங்கம், தங்கம்' என்று ஜபிக்க ஆரம்பித்துவிட்டதே! இது என்னடா, தொந்தரவு?' என்று ரகுபதி மண்டையைக் குழப்பிக் கொண்டான்.
சமையலறையிலிருந்து ஸரஸ்வதி கூடத்துக்கு வந்தாள். கைப்பிடிச் சுவரைப் பிடித்துக்கொண்டு பித்துப் பிடித்தவன் போல் நிற்கும் ரகுபதியைப் பார்த்து, "அத்தான்! தலைவலி எப்படி இருக்கிறது? கீழே வந்து பல் தேய்த்துவிட்டுக் காப்பி சாப்பிடுகிறாயா? இல்லை, மாடிக்கே நான் வெந்நீரும், காப்பியும் கொண்டு வரட்டுமா?" என்று விசாரித்தாள்.
"வேண்டாம் ஸரஸு! நானே வருகிறேன். அலமு அத்தையும், தங்கமும் ஊருக்குப் போய்விட்டார்களா? நன்றாகத்தான் தூங்கிவிட்டேன் போல் இருக்கிறது. என்னை எழுப்பக்கூடாதோ?" என்று கேட்டான் ரகுபதி,
"தங்கம் உன்னிடம் சொல்வதற்குத்தான் மாடிக்கு வந்தாள். நான் தான் உன்னைத் தொந்தரவு செய்யக்கூடா தென்று தடுத்துவிட்டேன். பாவம்! கபடமில்லாத பெண் அவள். . அவள் இல்லாமல் எனக்குக்கூட பொழுது போகாதுபோல் இருக் கிறது" என்றாள் ஸரஸ்வதி.
ரகுபதி மாடிப்படிகளில் மன நிம்மதியுடன் இறங்கினான். “தங்கம் என்னிடம் சொல்லிவிட்டுப் போகத்தான் நினைத்தாள்”: இது அவனுக்கு எவ்வளவோ ஆறுதலை அளித்தது. தங்கம் மாடிக்கு வந்து என்னை எழுப்பி இருந்தால் தொந்தரவு ஏற்பட்டுவிடும் என்று ஸரஸ்வதி தடுத்துவிட்டாளாமே? இது என்ன விந்தை! விந்தைதான்! கட்டவிழ்த்துவிட்ட குதிரை மாதிரி மனதுக்கு, 'எது நல்லது. எது கெட்டது' என்பதைத் தெரிய வைக்க ஸரஸ்வதியைப்போன்ற ஒருத்தி தேவைதான்! தங்கம் மாடிக்கு வந்திருந்தால் நிஜமாகவே ஏதாவது தொந்தரவு ஏற்பட்டிருக்கலாம்.' - விவேகியான ரகுபதியின் மனம் ஸரஸ்வதிக்கு மானசிகமாகத் தன் நன்றியைச் செலுத்தியது.
-------------
தொடரும்