சதா கவலையும் கண்ணீருமாக இருந்தால் உன் உடம்பு எப்படியம்மா சரியாகும்?" என்று ஆசையுடன் விசாரித்தான் தாயை.
"கவலைப்படாமல் எப்படியப்பா இருக்கமுடியும்; மானத்தோடு கௌரவமாக வாழ்ந்த குடும்பம் ஆயிற்றே, நம் குடும்பம்? ஏதாவது பேச்சை ஆரம்பித்தால் உன் அப்பா சீறி விழுகிறார். பெண்ணை 'நர்ஸு'கள் பள்ளியில் சேர்க்கப்போகிறாராம்! * படித்து விட்டு உத்தியோகம் செய்து சாப்பிடுகிறாள்! அவள் ஒருத்தரிடமும் கைகட்டி நிற்க வேண்டாம்' என்கிறாரே. இந்த நாளில் இது ஒரு வழக்கம் ஆரம்பித்து இருக்கிறதே!" என்று கூறிவிட்டு, வியாதியால் மெலிந்து வெளுத்துப்போன உதடுகளை நெளித்து வரண்ட சிரிப்பொன்றை உதிர்த்தாள், மங்களம்.
சந்துரு அலட்சியத்துடன் 'ஹும்' என்றுவிட்டு, "இவளுக்கு இருக்கிற பொறுமைக்கு 'நர்ஸ்' உத்தியோகம் ஒன்றுதான் குறைச்சலாக இருக்கிறது. பொறுமையிலே சாக்ஷாத் பூமிதேவி தான் நம் சாவித்திரி" என்றான்.
"மாப்பிள்ளையாகட்டும், அவன் அம்மாவாகட்டும் பரம சாதுக்கள். இவள்தான் புருஷனுக்கும் மாமியாருக்கும் சற்றுப் பணிந்து நடந்தால் என்ன? பணிவதால் என்ன முழுகியா விடும்?" என்றாள் மங்களம்.
பணிவைப்பற்றியும், அடக்கத்தைப்பற்றியும் ஓயாமல் பேசி அவ்விதமே பல வருஷங்கள் நடந்து கொண்ட மங்களத்தினாலேயே மகளின் மனத்தைப் பணியவைக்க முடியவில்லை என்றால் பிறகு யாரால் முடியப்போகிறது? சந்துரு யோசித்து விட்டு, "ஏனம்மா! தீபாவளிப் பண்டிகைக்குப் பத்துத் தினங்கள் கூட இல்லையே. தலை தீபாவளியாயிற்றே. மாப்பிள்ளையை அழைக்கவேண்டாமா? அப்பா, ரகுபதிக்கு ஏதாவது கடிதம் போடுவதாகச் சொன்னாரா?" எனக் கேட்டான்.
மங்களம் வருத்தத்துடன் தலையை அசைத்துவிட்டு, "அதையெல்லாம் அவர் காதிலே போட்டுக்கொள்வதே யில்லை. நான் சொன்னதற்குத் 'தலையும் இல்லை காலும் இல்லை' என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார். சந்துரு! நீதான் மாப்பிள்ளைக்கு ஒரு கடிதம் எழுதேன். அதிலே என்ன தவறு இருக் கிறது? அவசியம் தீபாவளிக்கு வரவேண்டும் என்று எழுதப்பா, அவர் கட்டாயம் வருவதானால் நான் எப்படியாவது சமாளித்து சீர்வரிசைகள் செய்துவிடுகிறேன்" என்றாள் குரல் தழுதழுக்க. நம்பிக்கையுடனும், ஆர்வத்துடனும் மங்களம் கேட்பதைச் சந்துருவால் தட்ட முடியவில்லை. 'மனைவி ஊரிலிருந்து வந்த பிறகு ஒருவரி கடிதம் கூடப் போடவில்லை. மாமனார் ஏனோ தானோ வென்று ஒன்றும் தெரியாதவர்போல் இருக்கிறார். மைத்துனன் அழைப்பு அனுப்பி மாப்பிள்ளை தலை தீபாவளிக்கு வந்த மாதிரிதான்' என்று நினைத்த சந்துரு, தாயைத் திருப்தி செய்யவேண்டி, காகிதமும், பேனாவும் எடுத்து வைத்துக்கொண்டு உட்கார்ந்தான்.