இல்லையா?" என்று கேட்டான் ரகுபதி.
"உன்னுடன் 'போய் வா' என்றுதான் சொன்னேன். அவளுக்குத்தான் தனியாக ஏதோ லட்சியம், கொள்கை என்றெல்லாம் இருக்கிறதே. அவள் என்ன சொல்லப் போகிறாளோ?" என்றாள் ஸ்வர்ணம்.
இதுவரையில் இவர்கள் பேச்சில் தலையிடாமல் கையிலிருந்த "மீரா பஜனை'க் கீர்த்தனங்களில் லயித்திருந்த ஸரஸ்வதி, அத்தையைப் பார்த்து, ”இந்த விஷயத்தில் என்னை இரண்டு பேரும் மன்னித்துவிடுங்கள். இன்றைய தினசரியில், அப்பா சர்க்கார் வேலையாக, அயல் நாட்டிலிருந்து சென்னை வந்து. மைசூர் போவதாகச் செய்தி வந்திருக்கிறது. நானும் மைசூர் போகப் போகிறேன், அத்தை. அத்தான் மட்டும் போய்வரட்டும். என்ன அத்தான் நான் சொல்கிறது?" என்று கேட்டாள்.
மூன்று வருஷங்களுக்கு மேலாகத் தகப்பனாரைப் பாராமல் இருந்த பெண்ணைத் தடை செய்வது நியாயம் என்று தோன்றாமல் போகவே ஸ்வர்ணமும், ரகுபதியும் ஸரஸ்வதியை அதற்கு மேல் வற்புறுத்த வில்லை. அத்துடன் ஸரஸ்வதியிடம் ஒரு சிறப்பான அம்சம் உண்டு. மனத்துக்குப் பிடிக்காத விஷயமாக இருந்தாலும் சரி, கொள்கைக்கு முரணாக இருந்தாலும் சரி, அதனால் எவ்வளவு நன்மை ஏற்படுவதானாலும் விட்டுக் கொடுக்க மாட்டாள். ஸரஸ்வதி, சாவித்திரியின் வீட்டுக்குப் போனால் சட்டென்று சமரஸம் ஏற்பட்டுவிடும். சமத்காரமாகப் பேசி எல்லோர் மனதையும் கவர்ந்துவிடுவாள். பழைய விரோதத்தை எல்லோரும் மறந்துவிடுவார்கள். ஆனால் சாவித்திரி புக்ககத்தில் இருந்த நான்கு மாதங்களில் ஒரு தினமாவது ஸரஸ்வதியிடம் இன்முகமாகப் பேசியதில்லை. அவளாகவே வலுவில் சென்று சாவித்திரியிடம் பேசினாலும், அவளை மதிப்பதில்லை. கடைசியாக சாவித்திரி ஊருக்குப் புறப்படுவதற்கு முதல் நாள் அன்புடன் அவள் கேட்டுக் கொண்டதைக்கூடப் பாராட்டாமல் சென்ற பெண்ணுடன், நேருக்கு நேர் நின்று, 'நான் வந்திருக்கிறேன், பார்! அழையா வீட்டுக்குச் சம்பந்தியாக!' என்று கூறிச் செல்வதற்கு வெட்கமாக இராதா? அசட்டுக் கௌரவமும், முரட்டுப் பிடிவாதமும் உடைய பெண்ணிடம் போய் கைகட்டி நிற்கும் படியான நிலைமை ஸரஸ்வதிக்கு ஏற்படவில்லை. ' என்னை இரண்டு பேரும் மன்னித்துவிடுங்கள்' அவள் அத்தையிடம் கேட்டுக் கொண்ட பாவனை-யிலிருந்து அவள் மனத்தில் ஓடும் எண்ணங்களை ஸ்வர்ணம் ஒருவாறு ஊகித்துக் கொண்டாள்.
' இந்த மட்டும் பிள்ளையாவது தீபாவளிக்குப் போகிறேன் என்று ஒப்புக் கொண்டானே' என்று ஸ்வர்ணம் ஆறுதல் அடைந்தாள்.
-------------
தொடரும்