Flexi Classics தொடர்கதை - இருளும் ஒளியும் - 27 - ஸரோஜா ராமமூர்த்தி
இருளும் ஒளியும் : 27. தங்கத்துக்கு அர்ப்பணம்
கடலலைகள் போல் ஓயாமல் பொங்கிக்கொண்டிருந்த ஸ்வர்ணத்தின் மனம், மகனின் பதிலைக் கேட்டு ஆறுதல் அடைந்தது. தீபாவளிக்கென்று மகனிடம் கொடுத்தனுப்ப சாவித்திரிக்கு விலையுயர்ந்த புடைவையை எடுத்தாள். பல வர்ணங்களில் ரவிக்கைத் துண்டுகள் வாங்கினாள். கட்டு வெற்றிலையும், வாசனைப் பாக்கும், சீப்புப் பழமும், மணக்கும் கதம்பமும் வாங்கிக் கூடையை நிரப்பினாள். "மனைவியிடம் நல்ல மாதிரி பேச வேண்டும். பரிவாக நடந்து கொள்ள வேண்டும். 'தஸ், புஸ்' ஸென்று உன் கோபத்தைக் காட்டாதே" என்றெல்லாம் புத்திமதிகள் கூறினாள் ஸ்வர்ணம். "வேட்டகத்தில் பெரியவர்கள் ஏதாவது சொன்னாலும் பொறுத்துக்கொள், அப்பா!" என்றுவேறு மகனுக்குச் சொன்னாள். ரகுபதி எல்லா வற்றிற்கும் மௌனமாகவே தலையை அசைத்தான். மைசூர் பிரயாணத்துக்காகப் பெட்டியில் துணிமணிகளை அடுக்கி வைத்துக் கொண்டிருந்த ஸரஸ்வதி, ஸ்வர்ணம் கூறுவதை முழுவதும் கேட்டுவிட்டு, "எல்லா புத்திமதிகளையும் சொன்னாயே அத்தை. முக்கியமான விஷயத்தைச் சொல்ல மறந்துவிட்டாயே" என்றாள்.
"என்ன?" என்று ஸ்வர்ணம் அவளைத் திருப்பிக் கேட்டதும், அவள், ”எல்லோரிடமும் சரிவர நடந்து கொண்டு திரும்பி வரும்போது சாவித்திரியையும் அழைத்து வந்து விடு என்று சொல்ல வேண்டாமா?" என்று கேட்டு விட்டு பெருமை பொங்கும் முகத்துடன் ரகுபதியைத் திரும்பிப் பார்த்தாள்,
"அதற்குத்தான் நீ அவனுடன் போய் எல்லாவற்றையும் பொறுமையுடன் நடத்திக்கொண்டு வருவாய் என்றிருந்தேன். திடீரென்று நீதான் யாத்திரை கிளம்பி விட்டாயே!" என்று நிஷ்டுரமாகப் பதிலளித்தாள் ஸ்வர்ணம்.
தீபாவளிக்கு இரண்டு தினங்களுக்கு முன்பே ரகுபதியும். ஸரஸ்வதியும் ஊருக்குக் கிளம்பிவிட்டார்கள். ரெயில் நிலையம் வரையில் இருவரும் ஒன்றாகச் சென்று வெவ்வேறு வண்டிகளில் ஏறினார்கள். "அத்தான்! நான் திரும்பி வரும்போது நீ தனியாக இருக்கக்கூடாது. கட்டாயம் சாவித்திரியை அழைத்து வந்து விடு" என்று உண்மையான அன்புடனும் அநுதாபத்துடனும் ஸரஸ்வதி கூறி அவனை ரெயில் ஏற்றினாள். ரகுபதியின் வண்டி புறப்பட்டுச் சென்ற பிறகு அரை மணி கழித்துத்தான் ஸரஸ்வதியின் ரெயில் கிளம்ப வேண்டும். ரெயில் சென்ற திசையைச் சிறிது நேரம் பார்த்துக்கொண்டிருந்துவிட்டு நிறைந்த மனத்துடன் ஸரஸ்வதி பெருமூச்சு விட்டாள்.
தீபாவளி கொண்டாடிவிட்டு மனைவியுடன் ரகுபதி ஊருக்குத் திரும்பி விட்டான் என்று அறிந்தால், அவள் சமீபத்தில் ஊருக்குத் திரும்பக்கூடாது என்று தீர்மானித்துக் கொண்டாள்.